Home Featured நாடு பதவிகள் போனாலும் பரவாயில்லை – சகோதரத் தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதில் தேசியத் தலைவருக்குத்...

பதவிகள் போனாலும் பரவாயில்லை – சகோதரத் தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதில் தேசியத் தலைவருக்குத் துணை நிற்போம்” – சந்திரசேகர் சுப்பையா

672
0
SHARE
Ad

Chandrasekar Suppiah Featureகோலாலம்பூர் – மஇகாவுக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்குத் தயார் என அறிவித்துள்ள தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் அறைகூவலுக்கு, கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதிக் காங்கிரசின் தலைவர் டத்தோ சந்திரசேகர் சுப்பையா (படம்) ஆதரவு தெரிவித்துள்ளார்.

“கட்சிக்கு வெளியே இருக்கும் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களையும், கட்சியில் தேசிய நிலையிலும், மத்திய செயலவையிலும் பதவி வகித்த சில முன்னாள் தலைவர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்குத் தயார் என நமது மஇகா தேசியத் தலைவர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கட்சிக்குள் மீண்டும் திரும்பும் அந்தத் தலைவர்களுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து, நாள்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே வேளையில் கட்சியில் இருக்கும் பல தொகுதித் தலைவர்களும், தேசிய நிலையில் பதவி வகிக்கும் சில தலைவர்களும்கூட கட்சிக்குள் வெளியே இருப்பவர்கள் மீண்டும் உள்ளே வருவது குறித்து மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்” என இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையொன்றில் சந்திரசேகர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

palanivel-subramaniam-MICதொடர்ந்து “இந்த இணைப்பின் மூலம், ஒருசிலர் தங்களின் கிளை மற்றும் தொகுதித் தலைவர்கள் பதவிகளைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, வெளியில் இருப்பவர்கள் மீண்டும் உள்ளே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் உள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதிக் காங்கிரசின் தலைவர் என்ற முறையில் நமது சகோதர கிளைத் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை நான் முழுமையாக வரவேற்கின்றேன். அத்துடன் இந்த உயரிய ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ள நமது தேசியத் தலைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சந்திரசேகர் சுப்பையா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் என்பதோடு, மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் துணைத் தலைவருமாவார்.

“நான் தலைவராக இருக்கும் பண்டார் துன் ரசாக் தொகுதியில் கூட, கட்சியில் நடந்த தலைமைத்துவப் போராட்டத்தின் காரணமாக, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சில கிளைகள் இந்த ஆண்டு நடைபெற்ற மறு-தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் எதையும் செய்யவில்லை. ஆனால் இந்தக் கிளைகளும் மீண்டும் நமது கட்சிக்குள், எனது தொகுதியின் வாயிலாக அனுமதிக்கப்படுவதை நான் இருகரம் நீட்டி வரவேற்கின்றேன்” என்றும் சந்திரசேகர் சுப்பையா மேலும் கூறியுள்ளார்.

Sothi---Feature“இந்த வேளையில் நமது சுயகௌரவங்கள், கட்சிப் பதவிகள் மீதான நமது ஆசைகள் என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நமது கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் நடந்து கொள்வோம். நமது எதிர்கால சந்ததியரின் நலன்களுக்காக, அவர்களின் மேம்பாட்டுக்காக நாம் முடிவுகள் எடுப்போம்” என்றும் வலியுறுத்தியுள்ள சந்திரசேகர் சுப்பையா,

“மீண்டும் நமது கட்சிக்குள் திரும்பி, சேவையாற்ற நினைக்கும் நமது சகோதர கிளைத் தலைவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தவும், முட்டுக்கட்டைகளைப் போடவும் நாம் முயற்சி செய்யக் கூடாது. சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர்களும் நம்மில் ஒருவராக நம்மிடையே வலம் வந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றும் சக மஇகாவினருக்கு நினைவுறுத்தியுள்ளார்.

Datuk S Balakrishnan“அதே போன்று, டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களும், கிளைத் தலைவர்களும் கட்சிக்கு திரும்புவதற்கு முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். அப்படியே நிபந்தனைகள் இருந்தாலும் அவை நியாயமானதாகவும், கட்சியில் உள்ள அனைத்துத் தரப்புகளாலும், ஏற்றுக் கொள்ளப்படும் விதத்திலும் இருக்க வேண்டும்” என்றும் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“முதலில் நாம் அனைவரும் ஒரே கட்சியாக ஒன்றுபட்டு, நமது கட்சியை பலப்படுத்தி, செம்மையாக இயங்கச் செய்து, எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பலம் பொருந்திய எதிர்க்கட்சிக் கூட்டணியை எதிர்கொள்ளத் தயாராவோம். இதன் அடிப்படையில், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாம் நமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி, அவருக்கு உறுதுணையாக நிற்போம் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் சந்திரசேகர் சுப்பையா தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.