கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற பழனிவேல் தரப்பின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்தத் தரப்பின் தலைமைச் செயலாளரான டத்தோ சோதிநாதன் (படம்) “எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் எங்கள் தரப்பிலான 1,800 கிளைகள் பங்கேற்காது” என அறிவித்திருந்தார்.
சோதிநாதனுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்று மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் விடுத்த அறிக்கையொன்றில் “எங்கே இருக்கின்றன அந்த 1,800 மஇகா கிளைகள்? அவற்றை சோதிநாதன் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா?” என்று சவால் விடுத்துள்ளார்.
“மஇகாவில் அனைவரும் ஒன்றுபட்டு சமுதாயத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகையில் குறிப்பிட்ட சிலர் தங்களின் சுயநல அரசியலுக்காக மீண்டும் மீண்டும் குழப்பங்களை நீடிக்க செய்து வருகிறார்கள். இவர்கள் குறிப்பிடுவது போல 1800 கிளைகள் எங்கே? பட்டியலிட்டு காட்ட முடியுமா?” என டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இப்படிப்பட்ட சூழலில் எப்படி பார்த்தாலும் அதிகபட்சமாக 800 கிளைகள் மட்டுமே மஇகாவிற்கு வெளியே இருக்கின்றன. 1800 கிளைகள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இந்த தகவலை சொல்லும் தரப்பினர் அதனை நிரூபிக்க முடியுமா? வெறுமனே பத்திரிக்கை வழி அறிக்கை வெளியிட்டு கட்சிக்குள் மீண்டும் குழப்பத்தை நீடிக்க செய்வதை சம்பந்தப்பட்ட தரப்பினர் சமுதாய நலன் கருதி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் மோகன் அறிவுறுத்தினார்.
“மஇகாவில் காலம் காலமாக சேவையாற்றி வந்த கிளைத் தலைவர்கள், தொகுதித்தலைவர்கள் சிலரின் அரசியல் சுயநலத்திற்காக அவர்களின் பேச்சைக்கேட்டு தங்களது கிளைகளை இழந்து, தொகுதியை இழந்து, பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களின் பேச்சை நம்பி கட்சியில் தங்களது பங்களிப்பை இழந்து விட வேண்டாம்” என்றும் அந்தக் கிளைத் தலைவர்களை மோகன் கேட்டுக் கொண்டார்.
“நாம் அனைவரும் நட்பின் அடிப்படையில் ஒன்றுபடுவோம் என கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாது அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றது. இனியும் நமக்குள் அரசியல் நடத்தி கொண்டிருப்பது நல்லதல்ல. கட்சியில் இணையும் தரப்பினரை முழுமனதோடு வரவேற்கிறோம். கட்சிக்குள் பிரச்சனைகளைத் தொடர்வதை நிறுத்தி விட்டு சமுதாயத்தை கவனிக்கும் பணிகளை தொடர்வோம்” என்றும் டி.மோகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.