Home Featured உலகம் பாலி தீவு வான்பரப்பில் பரபரப்பு : இரு விமானங்கள் மோதிக் கொள்வதில் இருந்து மயிரிழையில் தப்பித்தன

பாலி தீவு வான்பரப்பில் பரபரப்பு : இரு விமானங்கள் மோதிக் கொள்வதில் இருந்து மயிரிழையில் தப்பித்தன

592
0
SHARE
Ad

பாலி – இந்தோனேசியாவில், பாலி தீவின் வான்பரப்பில் புதன்கிழமையன்று இரு விமானங்கள் கிட்டத்தட்ட மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது என நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பாலி தீவில் தரையிறங்க வேண்டிய கருடா ஏர்லைன்ஸ் மற்றும் லயன் ஏர் நிறுவனங்களைச் சேர்ந்த இரு விமானங்களும் வெறும் 400 அடி உயர வித்தியாசத்தில் ஒன்றன் மீது ஒன்று பறந்ததை பலர் நேரில் கண்டதாகக் கூறப்படுகிறது.

bali-mapபொதுவாக விமானங்கள் வானில் ஒன்றன் கீழே மற்றொன்றாகப் பறந்து கொண்டிருக்கும்போது அவற்றுக்கிடையே குறைந்தபட்சம் ஆயிரம் அடி, அதாவது 305 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டியது அனைத்துலக விமானப் போக்குவரத்து விதிமுறைகளில் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

ஆனால் புதன்கிழமை பாலி தீவில் மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களின் விமானங்களுக்கும் இடையே வெறும் 400 மீட்டர் இடைவெளியே இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய பிளைட்ரேடார்.கோம், கெர்ரிஏர்வேஸ்.கோம் உள்ளிட்ட இணையத் தளங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும் போது, இரு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதில் இருந்து மயிரிழையில் தப்பித்ததாகத் தெரிவித்துள்ளன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசிய அரசுத் தரப்பிலோ, ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஏதும் ஆபத்தாக நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இரு விமானங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ஆயிரம் அடி இடைவெளி இருந்ததாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் விஸ்னு டர்ஜோனோ கூறியுள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் சுப்ரசெட்யோ கூறுகையில், ஊடகத் தகவல்கள் தவறானவை என்றும் இரு விமானங்களுக்கும் இடையே இரண்டாயிரம் அடி இடைவெளி இருந்தது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆளாளுக்கு ஒவ்வொறு விதமாகச் சொன்னாலும், விபத்து ஏதும் நிகழவில்லை என்பதே நிம்மதி தரும் தகவல்.