Home Featured வணிகம் இலண்டன் கெண்டக்கி உணவக ஐஸ் கட்டிகளில் மலக் கிருமிகள்! – உடனடி விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவு

இலண்டன் கெண்டக்கி உணவக ஐஸ் கட்டிகளில் மலக் கிருமிகள்! – உடனடி விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவு

747
0
SHARE
Ad

இலண்டன் – பிரிட்டனின் பெர்மிங்ஹாம் நகரிலுள்ள ஒரு கெண்டக்கி பிரைட் சிக்கன் உணவகத்தில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளில் மலக் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உடனடி விசாரணைக்கு அந்தத் தொடர் உணவகத்தின் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

கெண்டக்கி பிரைட் சிக்கன் உணவகம் சுருக்கமாக கேஎஃப்சி என அழைக்கப்படுகிறது.

kfc-1பெர்மிங்ஹாமிலுள்ள அந்த கேஎஃப்சி உணவகத்தில் பிபிசி தகவல் ஊடகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனையில் அங்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளில் மலக் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அந்த பரிசோதனை முடிவுகள் லீட்ஸ் பெக்கெட் (Leeds Beckett University)  பல்கலைக் கழகத்தால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிக அளவு கிருமிகள் ஐஸ் கட்டிகளில் இருந்ததாக அந்தப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ஒன்று இந்த ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் அந்த கிருமிகள் கலந்திருக்கலாம். அல்லது நேரடியாகவே இந்த ஐஸ் கட்டிகளில் அந்த கிருமிகள் இருந்திருக்கலாம். இந்த ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துபவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்றும் அந்தப் பல்கலைக் கழகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல பெரிய, பிரபலமான உணவகங்களில் தூய்மை குறித்து மேற்குறிப்பிட்ட ஆய்வுக் குழு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.

உடனடி விசாரணைக்கு கேஎஃப்சி உத்தரவு

இதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையொன்றில் கே.எஃப்.சி நிறுவனம் இந்த ஆய்வுகள் மீது தாங்கள் பெருத்த ஏமாற்றம் அடைவதாகவும், உடனடியாகத் தங்களின் விசாரணையைத் தொடக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தங்களின் பணியாளர்களிடையே தூய்மைப்படுத்தப்படும் மற்றும், கரங்களால் தொடப்படும் நடைமுறைகள் குறித்தும் மறுபயிற்சிகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கேஎஃப்சி தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு, தூய்மை, சுகாதாரம் ஆகிய அம்சங்களில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கேஎஃப்சி தெரிவித்துள்ளது.