பெய்ஜிங் – சீனாவில் பேரங்காடி ஒன்றில் தந்தையும், அவரது மகனும் விளையாடியபடி நடந்து செல்கையில், எதிர்பாராத விதமாக மகன் மீது தந்தை விழ, சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக மரணமுற்றிருப்பது பலரையும் வருந்தச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் அந்த பேரங்காடியின் இரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் தந்தை முன்னே செல்கிறார் அவரது இரண்டு கைகளையும் பின்னோக்கி இழுத்துப் பிடித்தபடி, மகன் நடந்து செல்கிறான்.
இந்நிலையில், திடீரென தந்தையும், மகனும் நிலை தடுமாறுகிறார்கள். மகன் கீழே விழுந்ததும், அவனது கழுத்துப் பகுதியில் தந்தை விழுகின்றார்.
உடனடியாக, தந்தை தனது மகனைத் தூக்கி அவனை எழுப்ப முயற்சி செய்கிறார். ஆனால் மகன் அசைவற்ற நிலையிலேயே இருக்கிறார்.
இந்நிலையில், அச்சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் என சீனாவைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இச்சம்பவம் குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ள தகவலில், இது போன்ற கழுத்துப் பகுதியில் காயமடைந்தவர்களை தக்க மருத்துவப் பயிற்சிகள் இன்றி தூக்கவோ, நகர்த்தவோ கூடாது என்று தெரிவித்துள்ளார்.