Home Featured நாடு மலேசியா எங்கும் மிதமான தீபாவளி கொண்டாட்டம்! திறந்த இல்ல உபசரிப்புகள் இரத்து!

மலேசியா எங்கும் மிதமான தீபாவளி கொண்டாட்டம்! திறந்த இல்ல உபசரிப்புகள் இரத்து!

832
0
SHARE
Ad

deepavali-2016-greetings

கோலாலம்பூர்- மலேசியா எங்கும் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிதமான அளவிலேயே இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. இதற்கான முக்கியக் காரணம் ஜோகூர் பாரு மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த, தீ விபத்து, அதைத் தொடர்ந்த உயிரிழப்புகள் காரணமாக, மஇகா தலைமையகம் ஆண்டுதோறும் நடத்தும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதுதான்.

மஇகாவின் திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப்பும் கலந்து கொள்வது வழக்கம்.

#TamilSchoolmychoice

தலைநகர் பத்துமலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இன்று காலை முதல் நடத்தப்பட விரிவான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த நிகழ்ச்சி, ஜோகூர் பாரு மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு இரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநில அளவிலான மஇகா திறந்த இல்ல உபசரிப்புகளும் இரத்து செய்யப்பட்டன.

இன்று, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பும், சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தலைமையில் நடைபெறவிருந்தது. இருப்பினும் அந்த உபசரிப்பும் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நஜிப்பின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

Najib-feature-இதனைத் தொடர்ந்து பிரதமர் நஜிப் எந்த பொது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளிலும் கலந்து கொள்ளவில்லை. தீபாவளி கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் நஜிப் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நேற்று விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இளம் வயதில், தனது தந்தை (முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்) மற்றும் தாயாருடன், இந்து நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று தோசை, சப்பாத்தி, முறுக்கு போன்ற உணவு வகைகளை உண்டு மகிழ்ந்ததை நஜிப் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கு நலன் பயக்கும் திட்டங்களை அமுல்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டை, தனது வாழ்த்துச் செய்தியில் மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதமர், அடுத்தாண்டு இந்திய சமுதாயத்திற்கான திட்ட வரைவு (புளுபிரிண்ட்) வெளியிடப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

subra-dr-micமஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் தனது வாழ்த்துச் செய்தியில் இந்தியர்கள் குடும்பத்தினருடனும், கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அளவான உணவுகளை உண்டு, உடல்  நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

(முகப்புப் படம் நன்றி : செல்லியல் வாசகர் இராமன் குட்டி)