மும்பை – இந்திய வரலாற்றில், குறிப்பாக மராத்திய வரலாற்றில் முத்திரை பதித்தவர் சத்ரபதி சிவாஜி. அந்த மன்னரின் வரலாறு தமிழ் நாட்டிலும் மிகவும் பிரபலம். அவரது காலத்திய வரலாற்று சம்பவங்களைக் கொண்டு தமிழ் நாட்டில் பல நாடகங்கள் அரங்கேறியுள்ளன.
அத்தகைய ஒரு நாடகம்தான் “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”. அதில் சிறப்பாக நடித்ததால், வி.சி.கணேசனாக இருந்த ஒரு சாதாரண நாடக நடிகர், தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் எனப் பெயர் சூட்டப்பட்டு, மிகச் சிறந்த தமிழ் நடிகராக உருவாகியதும் இன்னொரு வரலாறு.
அந்த சத்ரபதி சிவாஜிக்கு மும்பையை அடுத்த கடல் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த சிலை, அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட பெரியதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவாஜி சிலை கடலில் நிர்மாணிக்கப்படவிருப்பதால் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 23) கடலில் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ‘ஜல் தன்’ என்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.