Home இந்தியா இந்திய விமானப் படை வீரர்களுக்கு உற்சாகமூட்டிய நரேந்திர மோடி

இந்திய விமானப் படை வீரர்களுக்கு உற்சாகமூட்டிய நரேந்திர மோடி

43
0
SHARE
Ad

ஆதம்பூர் : இந்தியா-பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 13) வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விமானப் படை வீரர்கள் முன் உரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

“இன்று காலை நான் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வருகை துணிச்சல் மிகுந்த நமது போர்வீரர்களைச் சந்தித்தேன். துணிவையும் மன உறுதியையும், அச்சமின்மையையும் அந்த வீரர்களுடன் இருந்தது மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவமாகும். நமது நாட்டிற்காக எல்லாவகையிலும் பலவகை தியாகங்களை மேற்கொண்டுவரும் நமது இராணுவத்தினருக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும்” என மோடி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

இதற்கிடையில், நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி வழி ஆற்றிய உரையிலும் மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளின் நோக்கத்தை வெற்றியடையச் செய்த துணிச்சலான வீரர்களைப் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

“பகல்காம் படுகொலை நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு அருவருப்பான முயற்சியாகும். இது, எனக்கு தனிப்பட்ட முறையில், மிகப் பெரிய வலியைக் கொடுத்தது. அனைத்து தரப்புகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒன்று திரண்டு குரல் எழுப்பியதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்கி ஒழிக்க, இந்தியப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம்” என்றும் நேற்றைய உரையில் மோடி கூறினார்.

“இன்று பயங்கரவாதிகளும் பயங்கரவாத அமைப்புகளும், நமது குடும்பப் பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை அறிந்துக் கொண்டிருப்பார்கள். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது வெறும் பெயர் அல்ல, நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும்” என்றும் மோடி எச்சரித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பதற்கு பதிலாக, பதிலடியாக இந்தியாவைத் தாக்கியது. நமது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாதாரண குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றையும், நமது ராணுவத் தளங்களையும் பாகிஸ்தான் குறிவைத்தது. ஆனால் அதிலும் தோல்வியையே கண்டது என்றும் மோடி கூறினார்.

இந்தியா நடத்திய தாக்குதலில் ஆளில்லா சிறுவிமானங்களும், இந்திய ஏவுகணைகளும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கின என்றும் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.