Home Featured உலகம் காசை மிச்சப்படுத்த நினைத்து புலிகளுக்கு இரையான சீன இளைஞர்!

காசை மிச்சப்படுத்த நினைத்து புலிகளுக்கு இரையான சீன இளைஞர்!

627
0
SHARE
Ad

Tiger attackஷாங்காய் – சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிம்போ என்ற இடத்தில் உள்ள யோங்கர் உயிரியல் பூங்காவிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை சாங் என்பவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர் லீ என்பவருடன் சென்றார்.

பூங்காவில் புலிகளின் வசிப்பிடத்திற்குச் சென்ற சாங்கும், லீயும், சீன மதிப்பில் 130 யுவான் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்குவதைத் தவிர்க்க, அருகே இருந்த 3 மீட்டர் உயரமுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட முயற்சி செய்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக சாங், புலிகளின் வசிப்பிடத்தில் தவறி விழுந்துள்ளார். மிகவும் பசியில் இருந்த புலிகளில் ஒன்று சாங்கை இழுத்துச் சென்றுள்ளது. அதனுடன் மேலும் மூன்று புலிகளும் சேர்ந்து கொண்டு சாங்கை தாக்கத் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

இதனைப் பார்த்த மற்ற பார்வையாளர்கள் கத்திக் கூச்சலிட்டதோடு, பூங்கா நிர்வாகத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பூங்கா நிர்வாகத்தினர், புலிகளின் மீது தண்ணீரைப் பீச்சியடித்தும், வெடிகளை வெடிக்கச் செய்தும் புலிகளை அங்கிருந்து கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

என்றாலும் சாங்கின் கழுத்தைக் கடித்திருந்த புலி அவரை விடுவிக்க மறுக்கவே, வேறு வழியின்றி அப்புலியை காவல்துறையினரின் உதவியுடன் பூங்கா நிர்வாகத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாங், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சாங்கை புலிகள் கடித்துக் குதறும் காட்சி அங்கிருந்த பார்வையாளர்களால் திறன்பேசிகளில் பதிவு செய்யப்பட்ட தற்போது நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.