வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரானுக்கிடையிலான போர் ஒரு முடிவுக்கு வருவதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் இந்தப் போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்தப் போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக எவ்வாறு கொண்டு வரப்படும் என டிரம்ப் பதிவிட்டார்.
எனினும் மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை (ஜூன் 24) சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது என இஸ்ரேல் தற்காப்பு அமைச்சு அறிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் உண்மையிலேயே நடைமுறைக்கு வருமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
போர்நிறுத்தத்திற்குப் பின்னர் ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கும் வேளையில், போர்நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.