Home Featured தமிழ் நாடு திமுக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது! ஆளுநர் மாளிகை முன் மறியல் போராட்டம்!

திமுக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது! ஆளுநர் மாளிகை முன் மறியல் போராட்டம்!

852
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் மாலை 6.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கிய தமிழகத்தின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இந்தியா முழுமையும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நடந்து கொண்டதோடு, அவைத் தலைவர் தனபாலைத் தள்ளியும், அவரது மேசையையும் மற்ற சட்டமன்ற அவையின் தளவாடப் பொருட்களையும் சேதப்படுத்தினர்.

Edapadi Palanisamyஎடப்பாடி பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்து, ஆதரவுப் பட்டியலை வழங்கிய கோப்புப் படம்…

இதனைத் தொடர்ந்து, அவையின் பாதுகாவலர்கள் பத்திரமாக பாதுகாப்புடன் அவைத் தலைவர் தனபாலை அவையிலிருந்து வெளியேற்றினர்.

#TamilSchoolmychoice

அவைத் தலைவர் தனபால், மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட காரணத்தால், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார்.

எனினும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற மறுத்ததால், அவர்கள் வலுக்கட்டாயமாக பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சிகளில் ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது என்றும் தான் தாக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார்.

எனினும், அவர் பாதுகாவலர்களுடன் ஒத்துழைக்க மறுத்த காரணத்தால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட காரணத்தால்தான் இது நிகழ்ந்தது என்றும் மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் தாக்கப்படவில்லை என்றும் சுப்ரமணிய சுவாமி, புதுடில்லியிலிருந்து வழங்கிய தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார்.

திமுக எல்லாப் பிரச்சனைகளிலும் வன்முறையைக் கையாளும் கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் சுப்ரமணிய சுவாமி சாடினார்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளிகளின் காரணமாக, பிற்பகல் 3.00 மணிக்கு சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் சட்டமன்றம் கூடியபோது, எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை  தீர்மானம் முன்மொழியப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் எடப்பாடிக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்தன.

எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 11 வாக்குகளே கிடைத்தன.

இந்த வாக்களிப்பில் திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் ஜெயலலிதா நினைவிடம் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுகவினரோ, தற்போது ஆளுநர் மாளிகையின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

-செல்லியல் தொகுப்பு