Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி

மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி

948
0
SHARE
Ad

நியூயார்க் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் நிலையில், அப்போதைய மலேசிய அரசாங்கம் தங்களிடம் பொய்களைக் கூறியதாகப் பதிலடி கொடுத்திருக்கிறது.

1எம்டிபி ஊழல் விவகாரத்தில் கோல்ட்மேன் சாச்ஸ் எதிர்நோக்கும் முதல் குற்றவியல் வழக்கு இதுவாகும்.

1எம்டி மற்றும் அதன் 4 உயர் அதிகாரிகள் சுமார் 2.7 பில்லியன் ரிங்கிட்டை 1எம்டிபி நிதியிலிருந்து முறைகேடான முறைகளில் திசைமாற்றினர் என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் வழக்கு தொடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவரும் கோல்ட்மேன் சாச்ஸ், மலேசிய அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகள் அல்லது தலைவர்கள் 1எம்டிபி குறித்தும், அதன் வருமானங்கள் யார்வசம் செல்கின்றன என்பது குறித்தும், தங்களிடமும், தங்களால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்களிடம்  பொய்யானத் தகவல்களை வழங்கினர் என்று பதிலடி கொடுத்துள்ளது.

“1எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியும், அதன் நிர்வாக வாரியமும் நேரடியாக அப்போதைய பிரதமரிடம் தனது பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் 1எம்டிபியுடனான வணிகப் பரிமாற்றங்களில் இடைத்தரகர்கள் யாருமில்லை என எழுத்துபூர்வமான உறுதியளித்திருந்தனர்” என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அதன் பேச்சாளர் மைக்கல் டுவால்லி (Michael DuVally).

மலேசிய அரசாங்கம் தொடுத்திருந்த வழக்கை எதிர்த்துப் போராடுவோம் என்றும், இந்த வழக்கினால் அனைத்துலக அளவில் தங்களின் வணிக ஆற்றலும், நடப்பு வணிகங்களும் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது கோல்ட்மேன் சாச்ஸ்.

மலேசிய அரசாங்கத்தின் வழக்கு காரணமாக அதன் பங்குகளின் விலைகள் சுமார் 2.8  விழுக்காடு வரையில் வீழ்ச்சி கண்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.