Home இந்தியா அசாமில் இந்தியாவின் மிக நீளமான பாலம் – மோடி திறந்து வைத்தார்

அசாமில் இந்தியாவின் மிக நீளமான பாலம் – மோடி திறந்து வைத்தார்

1237
0
SHARE
Ad

கவுகாத்தி (அசாம்) – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போகிபீல் என்ற இடத்தில் இந்தியாவின் மிக நீளமான இரயில் மற்றும் சாலை வசதிகள் கொண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதோடு, நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாளை முன்னிட்டும் இந்தப் பாலம் திறந்து வைக்கப்படுகிறது. 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் இந்தப் பாலத்திற்கான பணிகளைத் தொடக்கி வைத்தார். 1997-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தேவகவுடா அடிக்கல் நாட்டிய இந்தப் பாலம் 21 ஆண்டுகளாக கட்டப்பட்டது.

அடுத்து வரும் 120 ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான பாலமாகும்.

#TamilSchoolmychoice

அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து 4.94 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது இப்பாலம்.

கீழ் தளத்தில், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களும், மேல் தளத்தில் 3 வழிச்சாலையும் இந்தப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த பின்னர் அதைத் தொடர்ந்து அந்த பாலத்தில் பயணம் செய்தார்.

இந்தப் பாலத்தின் மூலம் பயண தூரம் குறைக்கப்படுகிறது என்பதோடு இந்த பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டவுடன் வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்படும்.

சீனாவுக்கு அருகில் உள்ள எல்லையை விரைவில் அடையவும் இந்த பாலம் இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.