Home நாடு சண்டாக்கான்: காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும்!- தேர்தல் ஆணையம்

சண்டாக்கான்: காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும்!- தேர்தல் ஆணையம்

601
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் காலை 7.30 மணிக்கே வாக்களிப்பு தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7.30 மணி தொடங்கி மாலை 5 மணி வரையிலும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க அவகாசம் கொடுக்கப்படும் என அது குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள், வேட்பாளர் முகவர்கள், மற்றும் பார்வையாளர்களின் நோன்பு திறக்கும் நேரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரும் கூறினார்.

இம்முறை 70 விழுக்காடு வாக்காளர்கள் சண்டாக்கான் இடைத் தேர்தலில் வாக்களிப்பர் என எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், தேர்தல் முடிவுகள் இரவு பத்து மணிக்குள் அறிவிக்கப்பட்டு விடும் எனவும் அது குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவ உள்ளது. நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில், ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.

இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லா, சியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 270 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.