Home நாடு தமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

தமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

1557
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு தமிழ்நாட்டு காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் கூட்டப் பெறுகிறது.

வளர்ச்சிக் குன்றிக் கிடக்கும் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உலகளாவிய முறையில் ஓர் உந்துதலைச் சேர்க்க வேண்டுமென்ற நன் நோக்கில் கடந்த ஆண்டு மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் முதலாம் உலகத் தமிழ் குழந்தை இலக்கிய மாநாட்டை 2018 ஜூன் திங்கள் 8 முதல் 10ஆம் நாள்வரை கூட்டியது.

அதனைத் தொடர்ந்து 2019 மே திங்கள் 17,18,19ஆம் நாள்களில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது மாநாடு நடக்கவிருக்கிறது. முது பேராசிரியர் கண. சிற்சபேசன், பெரும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகியோரை உள்ளிட்ட செயலவை இம் மாட்டை நடத்துகிறதென்று முதல் மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய முனைவர் முரசு நெடுமாறன் (படம்) கூறினார்.

மறைமலை இலக்குவனார்
#TamilSchoolmychoice

முதல் மாநாட்டிற்கு பேரளவு துணைபுரிந்து பெருங்கொடை அளித்த செந்தமிழ்ச்செல்வர் திரு. ஓம்ஸ். பா. தியாகராஜன் இந்த மாநாட்டிற்கும் பேரளவு ஆதரவு தந்து வருகிறார்.

மாநாட்டு விளக்க ஏட்டை 2-ஆம் மாநாட்டுச் செயலவையும் மலேசியச் செயலவையும் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளன. அதனில் எல்லாம் விளக்கமாகச் சொல்லப் பெற்றுள்ளன என்றார் முரசு நெடுமாறன்.

மலேசிய, உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத் தலைவர் ப. கு. சண்முகம் தகவுரைஞராய் நின்று செயல்பட்டுவருகிறார். ப. கு. சண்முகம் அவர்களுடன் மன்னர் மன்னன், பிரகாஷ் அருணாசலம் ஆகியோர் பேராளராக கலந்து கொள்வார்கள்.

மன்னர் மன்னன்

முனைவர் முரசு நெடுமாறன், இளவரசு நெடுமாறன், முனைவர் மோகனதாஸ் இராமசாமி, ஆ. குணநாதன், திருமதி நிர்மலாதேவி, திருமதி பூரணி வரதராஜூ, திருமதி கவிதா வீரமுத்து, மகேந்திரன் நவமணி, திருமதி புனிதா சுப்பிரமணியம் ஆகியோர் கட்டுரைகள் படைக்க உள்ளனர் என்றும் முனைவர் முரசு நெடுமாறன் தெரிவித்தார்.

ப.கு.சண்முகம்

இங்கிருந்து பேராளர்களை அழைத்துச் செல்லும் பொறுப்புக்கு முதலாம் மாநாட்டுச் செயலாளர் மன்னர் மன்னன் மருதை அவர்கள் அமர்த்தம் பெற்றுள்ளார்.

மாநாட்டிற்குப் பேராளர்கள் 17.05.2019ஆம் நாள் காலை திருச்சி வழியாகச் சென்று 21.5.2019-ஆம் நாள் மாலை திரும்ப ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது. அனைத்துத் தொடர்புக்கும் பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மன்னர் மன்னன் மருதை அவர்களை அணுகலாம். அவரது கைப்பேசி எண்: 013-3417389; மின்னஞ்சல்: [email protected]

“இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள். குழந்தை இலக்கிய வளர்ச்சியே செவ்விலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படை. மாநாட்டில் கூடுவோம், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் மனமலர்ச்சிக்கும் வழிவகை காண்போம்!” என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.