Home One Line P2 சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை ‘பாரம்’ படம் பெற்றது!

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை ‘பாரம்’ படம் பெற்றது!

1085
0
SHARE
Ad

சென்னை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகள் வெற்றியாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மிகுந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தப்பட்டது. ஒரு சில பிரிவுகளில் இம்முடிவுகள் இரசிகர்களிடையே நியாயமான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது ஒப்பீட்டளவில் பெரும்பாலானோரால் அறியப்படாதபாரம்’ என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பெரும்பாலான இரசிகர்கள் தங்களுக்கு பாரம் படம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை என்று கூறியதுடன், பல பெரிய தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் இடம் பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதே நேரத்தில், ஒரு சில இரசிகர்கள் இந்த முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தின்  இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமியின், தமிழ்நாட்டில் கிராமப்புரங்களில் தலைகூத்தல் (முதியவர்களை தலைக்குக் குளிப்பாட்டி கொலை செய்யும் முறை. குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டப்படுவர். பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் குடிக்கத் தரப்படும். எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இறப்பு ஏற்படும்) வழக்கத்தை மையப்படுத்தி படத்தினை சுவாரசியமாக எடுத்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த படங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து இரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருக்க, பாரம் குறித்த பரவலான அறிமுகம் இரசிகர்களிடத்தில் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.