“துன் மகாதீரும் ஹாடி அவாங்கும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து கருத்து கூறுவதற்கு முன்னர், நமது சொந்த நாட்டில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, நிவர்த்தி செய்ய முற்பட வேண்டும். அதை விடுத்து, பிற நாடுகளின் குடியுரிமை சட்டத் திருத்தங்களின் பின்புலத்தினை ஆராயாமல், உணர்ச்சிவசப்பட்டு விமர்சிப்பதும், கண்டிப்பதும் விவேகமல்ல,” என நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
“அனைத்துலக மரபின்படியும் ஐக்கிய நாடுகளின் கொள்கையின்படியும், சுயாட்சிப் பெற்ற எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பிற நாடுகளுக்கு உரிமையில்லை. இதனை அறியாதவரா நமது பிரதமர்? எதன் அடிப்படையில் அவர் இந்திய நாட்டின் குடியுரிமை சட்டவிதித் திருத்தங்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார்? இம்மாதிரியான விமர்சனங்களும், கண்டிப்புகளும் மலேசியாவின் மீது மீண்டும் பாய ஒரு கணம் போதும்! மலேசியாவில் ஜனநாயகமும், சுதந்திரமும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளதாக பிற நாடுகள் கருதினால், அவை நம் நாட்டில் தலையிட உரிமையுள்ளதா? அம்மாதிரியான உரிமை இருக்குமேயானால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசியா மீது விமர்சனங்கள் தொடுக்கத் தயங்க மாட்டார் என்பது திண்ணம். பல்வேறு குற்றங்களுக்காக இந்தியா தேடும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு அடைக்கலமும், நிரந்தர குடியுரிமையும் வழங்கிய நாடல்லவா நமது மலேசியா!” என விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
“பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் நாடு மலேசியா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வப்போது பிரச்சினைகளும், பிணக்குகளும் எட்டிப்பார்த்தாலும், அவற்றை உடனே சுமுகமாகக் களைந்து, மறந்து ஒற்றுமையுடன் திகழ்கிறோம். ஆனால் அதுவே நாம் பிற நாடுகளை குறை கூறி, விமர்சிப்பதற்கான உரிமமாக அமையாது. மலேசிய மக்களிடையே நிலவும் பாராப்பட்சங்களை முதலில் களையுங்கள். நாடு சரியான பாதையில் செல்கின்றதா? நாட்டின் தலைமைத்துவம் சீராக உள்ளதா? அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றதா? இவற்றை முதலில் ஆராயுங்கள், சரி செய்யுங்கள். அதை விடுத்து பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அனத்துலக நாடுகளின் வெறுப்பினை சம்பாதிக்காதீர்!” என விக்னேஸ்வரன் அறிவுறுத்தினார்.