Home நாடு மலேசியா – சிங்கைவாழ் தமிழர்களின் எழுச்சியின் அடையாளம் தமிழவேள் கோசா

மலேசியா – சிங்கைவாழ் தமிழர்களின் எழுச்சியின் அடையாளம் தமிழவேள் கோசா

1253
0
SHARE
Ad
அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி

(மலேசியா – சிங்கை வாழ் தமிழர் சமுதாயத்திற்கெனவும், தமிழ் மொழிக்கெனவும் பல முனைகளிலும் பாடுபட்டவர், உழைத்தவர் அனைவராலும் தமிழவேள் எனக் கொண்டாடப்படும் அமரர் கோ.சாரங்கபாணி. “கோசா” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர். மார்ச் 16-ஆம் நாள் அன்னாரின் நினைவு நாளை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

மலாயா – சிங்கைவாழ் தமிழர்தம் நெஞ்சந்தனில் தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தவர் ‘தமிழவேள்’ கோ.சா. மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றுவதற்கு விதையாகவும் அது தோன்றியபின் அதற்கு வேராகவும் விழுதாகவும் இருந்த கோமான் கோ.சாரங்கபாணி என்னும் ‘கோ.சா.’

ஏறக்குறைய புதிய தலைமுறை மறந்துவிட்ட இந்தப் பெயர், முந்திய தலைமுறையினருக்கோ மிகவும் பரிச்சயமான பெயர். அவர் தொடங்கிய தமிழ் முரசு நாளிதழ்வழி அவர் தொடர்ந்த தமிழ்ப் பணி, அவரின் வாழ்நாளின் கடைசிக் கட்டம்வரைத் தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

அன்றைய தஞ்சை மண்டலத்தில் இணைந்திருந்த இன்றைய திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூர் அருகே விசயபுரம் என்று பட்டணத்தில் 1903-ஆம் ஆண்டில் பிறந்த கோசா, தனது 21-வது வயதில் கடல் கடந்து இந்த மண்ணுக்கு வந்தார். வந்தவர், சிங்கையில் தொடர்ந்து நிலைகொண்டாலும் மாலாயாவாழ் தமிழருக்கும் தமிழுக்கும் தொய்வில்லாத பணியைத் தொடர்ந்தார்.

மலேசியாவின் முதல் உயர்க்கல்வி நிறுவனமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக இருக்கை ஏற்படுத்திய சாதனை அவருக்கு சொந்தமானது. தமிழ்ச் சமூகத்தின் உதவியை பற்றுக் கோடாகக் கொண்டு, அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வியல் பிரிவைக்  கட்டமைத்தார். அப்போது, நீலகண்ட சாஸ்திரி என்பார், தமிழ் மொழிக்கு பதிலாக சமஸ்கிருத மொழிக்கு இருக்கை ஏற்படுத்த முயன்றார். அவரை முறியடித்து, அன்றைய மலாயாவாழ் தமிழர்களின் துணையுடன் ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் நிதித் திட்டத்தைத் தொடங்கி, தோட்டம் தோட்டமாக அலைந்து பிரச்சாரம் மேற்கொண்டு நிதியோடு நூல்களையும் சேகரித்து தமிழ் மொழிக்கான இருக்கையை மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிறுவிய பெருமை இப்பெருமகனையேச் சாரும்.

தொடர்ந்து பத்தொன்பது பல்கலைக்கழகங்கள் இங்கு தோற்றுவிக்கப்பட்டாலும் அவற்றில் ஒன்றில்கூட தமிழ் இருக்கையை ஏற்படுத்த நம் தலைவர்கள் தவறி விட்டனர்.

அவ்வாறு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிலைகொண்டுள்ள தமிழாய்வுப் பிரிவிலும் தமிழில் முனைவர் பட்டம் பெற முடியாது என்பது பெரும் பின்னடைவாகவேக் கருதப்படுகிறது. இதற்காக குரல் கொடுப்பாரும் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பாரும் எவருமிலர் என்று மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் மேநாள் தலைவர் இரா. மோகனதாசன் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் சற்று கற்றவர்கள் வீட்டிலும் வெளியிலும் மலாய் மொழிக்கும் ஆங்கிலத்திற்குமே முன்னுரிமை அளித்தனர். அவர்கள், தமிழில் பேசுவதை கண்ணியக் குறைவாகக் கருதினர். விலா எலும்பு நோக பாடுபட்ட தோட்டப் பாட்டாளிகளோ தமிழகத்திற்கு திரும்பி விடலாமா அல்லது இங்கேயே இன்னும் கொஞ்ச காலம் இருக்கலாமா என்ற இருநிலைப்பாட்டில் தத்தளித்தனர். இருந்தபோதும் அரும்பாடுபட்டு இந்த இருதரப்பாரிடமும் முற்போக்கு சிந்தனையையும் தமிழ்ப்பற்றையும் ஏற்படுத்தினார் கோசா.

மொழிக்கும் இனத்திற்கும் ஒரு நாளிதழை படைக் களமாக பயன்படுத்த முடியும் என்று “தமிழ் முரசு” நாளிதழை நிறுவிய அவர், தமிழ்ச் சமூகத்தோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தார். மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் எந்த அளவு கடப்பாடு கொண்டிருந்தாரோ அந்த அளவிற்கு சமுதாயத் தொண்டிலும் அக்கறைக் காட்டினார். குறிப்பாக, சிங்கையில் ஏராளமானோர் குடியுரிமை பெற வழிவகுத்தார் அவர்.

இவர் வழிநடத்திய  தமிழ் முரசு நாளேட்டின்வழி தமிழ் எழுத்தாளர் பேரவை, மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கி சமுதாய எழுச்சிக்கு வித்தாக இருந்தார்.

அவரால் நடத்தப்பட்ட தமிழ் முரசு நாளிதழ் நாளடைவில் மலேசியாவில் நிறுத்தப்பட்டாலும், சிங்கையில், வேறொரு உரிமையாளரைக் கொண்டு இன்னும் தொடர்ந்து அதே பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கோசா நினைவாக தமிழ்ப் பள்ளி ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மலேசிய-சிங்கப்பூர் தமிழ் மக்களின் உயர்வுக்கும் மேன்மைக்கும் தொண்டாற்றிய கோசா என்னும் நல்லாரை அவருடைய நினைவு நாளான மார்ச் 16-ஆம் நாளில் நினைவு கூர்வோம்.

– நக்கீரன்