Home One Line P1 அம்னோவை விமர்சித்த அமைச்சர் மன்னிப்புக் கோரினார்

அம்னோவை விமர்சித்த அமைச்சர் மன்னிப்புக் கோரினார்

426
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமது கருத்தின் தீவிரத்தை உணர்ந்த மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமட் இன்று மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும், கிராம அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் அவர், தனது அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“அந்த அறிக்கை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத தனிப்பட்ட அறிக்கை. எனது அறிக்கை சிலரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், பெர்சாத்து கட்சியின் அமைச்சராக தேசிய கூட்டணியின் நோக்கத்தை முழுமையாக ஆதரிப்பதாக அவர் கூறினார்.

“உண்மையான எதிரி எதிர்கட்சியினர். நமக்குள் நாமே மோதிக் கொள்ள வேண்டாம். நான் செய்த தவறுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அப்துல் லத்தீப் அகமட் பதவி விலகுமாறு அம்னோ இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் அம்னோ இளைஞர்கள் அப்துல் லத்தீப்பின் கூற்றை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக அதன் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி தெரிவித்திருந்தார்.

“இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மற்றும் திமிர்பிடித்த அறிக்கைகளை அரசியல் கட்சிகளின் கூட்டணியால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அமைச்சரால் வெளியிடக்கூடாது, குறிப்பாக அம்னோ அதன் மிகப்பெரிய கூட்டணி கட்சியாக இருக்கிறது.

“அம்னோவிலிருந்து தப்பி வெளியேறிய ஒரு துரோகி இத்தகைய அவமானகரமான அறிக்கையை வெளியிட்டது, இன்னும் முரண். அவர் அம்னோ கொடுத்த மெர்சிங் தொகுதியில் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

“இவ்வாறு, அம்னோவின் மரியாதைக்காகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயல்படும் கட்சிகளின் நல்லிணக்கத்தையும் மரியாதையையும் பேணுவதற்காகவும், டத்தோ லத்தீப் உடனடியாக அமைச்சரவை பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அம்னோ இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர்!” என்று அசிராப் தெரிவித்திருந்தார்.

பெர்சாத்து உறுப்பினரான அப்துல் லத்தீப் ஒரு திறந்த கலந்திரையாடலில் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதன்பின்னர் அது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

“சபா மக்கள் கட்சித் தாவல் என்று அழைக்கவில்லை, அவர்கள் ‘ஹிஜ்ரா’ என்று அழைக்கிறார்கள்.

“அம்னோ இப்போது செயல்படவில்லை. அம்னோ, நான் சபா அம்னோ கட்சியைக் குறிப்பிடுகிறேன். கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரும் பெர்சாத்துவிற்கு சென்றுள்ளார்கள். ” என்று அமைச்சர் கூறியிருந்தார்.