Home நாடு “பெற்றோர்கள் வாழும் காலத்திலேயே தேவையறிந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம்” – சரவணன் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

“பெற்றோர்கள் வாழும் காலத்திலேயே தேவையறிந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம்” – சரவணன் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

561
0
SHARE
Ad

தந்தையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

அன்பும், அக்கறையும் கொண்ட தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். தந்தை என்பவர் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, பிள்ளைகளுக்குத் தேவைவயானவற்றை வழங்க, அல்லும் பகலும் உழைக்கும் ஓர் உன்னத உறவு. பொருளாதார ரீதியாக குடும்பத்தை உயர்த்தும் அப்பாக்களின் முழுமுதற் கடமையாக இருப்பது பிள்ளைகளின் நலனும், வளர்ச்சியும், அவர்களின் தேவையுமே. எனவேதான் அப்பாவின் சுமை அதிகம்.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் தந்தை, தான் அனுபவிக்கின்ற அத்தனை துன்பங்களையும் மறைத்துக் கொண்டு கல்வி, பொருளாதார ரீதியாக தன் பிள்ளைகளை, உயர்ந்த உன்னத நிலைக்குக் கொண்டு வருவதற்காக ஆற்றுகின்ற பங்கு அளப்பரியது.

நேற்றைய தலைமுறை அப்பாக்களிடம் கண்டிப்பை அதிகமாகக் காணலாம், காரணம் பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருந்தால்தான் அவர்களை நல்வழியில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை. அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறை அப்பாக்கள் அப்படியல்ல. அன்பும், அரவணைப்பும் நிறைந்த தாயுள்ளம் கொண்ட தந்தையர்களே அதிகம். இன்னும் சொல்லப் போனால் பிள்ளைகளைக் கண்டிக்கும் அம்மாக்களையே கண்டிக்கும் அப்பாக்கள் தான் அதிகம்.

#TamilSchoolmychoice

ஆனால் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நாம் மறக்கக்கூடாது. எந்த ஒரு செயலும் அளவோடு இருந்தால் தான் சிறப்பு. அதுவும் இன்றைய நவநாகரீக உலகில் அனைத்து வகையான தீய, நல்ல பழக்க வழக்கங்களையும், அறியும் சூழல் நம் குழந்தைகளைச் சுற்றி இருக்கிறது. அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று உணர்த்தும் கடமை தந்தைக்கு உண்டு.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – குறள் 67

வள்ளுவன் கூற்றுப்படி தந்தையின் தலையாய கடமைகளில் ஒன்று பிள்ளைகளைக் கல்வியில் சிறந்தவர்கள் ஆக்குவதே. அதற்கான வாய்ப்பையும், வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டியது தந்தையின் கடமை.

அப்படி நம்மை உயர்த்திவிட்ட தாய், தந்தையரைப் பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை. வாழும்போதே தாய், தந்தையரின் தேவையறிந்து, அவர்களை மனமகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நமது கடமையாகும்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு செழிப்பாக இருக்க, தன்னை வருத்திக் கொள்ளும் அப்பாக்கள் அனைவருக்கும் மீண்டும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

      “தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே”

ஒரு நாள் மட்டுமல்ல, அனுதினமும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தந்தையர்கள்.