Home நாடு மலேசிய இந்துக் கோவில்கள் தகவல்கள் கொண்ட இணைய முகப்பு உருவாக்கம் – சரவணன் அறிவிப்பு

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல்கள் கொண்ட இணைய முகப்பு உருவாக்கம் – சரவணன் அறிவிப்பு

708
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் தகவல்கள் வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், இணையத் தளம் (Portal) ஒன்று உருவாக்கப்படவுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் தெரிவித்தார். அந்தப் பணியை மேற்கொள்ள “கோவில் ஆய்வு மேம்பாட்டுத் துறை” அமைத்து இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது.

அதற்கு முன்னெடுப்பாக இன்று நாட்டிலுள்ள சமயம் சார்ந்த பொது இயக்கங்களுடன் சந்திப்பு ஒன்றும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இந்தத் திட்டம் வெற்றி பெற அனைத்து சமயம் சார்ந்த பொது இயக்கங்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக்கொண்டார்.

மனிதவள அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சு இணைந்து மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களின் தகவல்களைச் சேகரித்து அதனைப் பிரத்தியேக இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யும் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன.

#TamilSchoolmychoice

ஆலய எதிர்கால வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சிந்தனையில் மலர்ந்த இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் டத்தோ பரமசிவம் முத்துசாமி அவர்களின் தலைமையில் குழு அமைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியின் மூலம் மலேசியாவில் உள்ள இந்துக் கோவில்கள் பற்றிய தகவல்கள், ஸ்தல வரலாறு, விழாக்கள் போன்ற பல்வேறு தகவல்கள் ஒட்டுமொத்த இந்துக்களின் பயனுக்காக அமையும்.

இந்த ஆய்வுக்குழுவின் முதல் கட்டப் பணியாக மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களின் விவரங்களைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை வடிவமைத்து, அனைவருக்கும் உதவும் வகையில் இணையத்தளம் இயக்கப்படவுள்ளது.

மேலும் பேசுகையில், அமைச்சர் அவர்கள், “இந்த இணைய முகப்பை உருவாக்குவதன் மூலம் மலேசியாவில் இந்து கோவில்கள் பற்றிய அதிகாரப்பூர்வ கட்டமைப்பை நிறுவ முடியும். மேலும், மலேசியாவில் உள்ள இந்து கோவில்களின் ஒட்டுமொத்த தரவுகளுக்கான முதன்மை குறிப்பு இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த இணைய முகப்பு அனைத்து தரப்பினருக்கும் உதவும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

சில அமைப்புகளில் இதே ரீதியிலான முந்தைய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அவை அனைத்தும் முழுமையான ரீதியில் தரவு கிடைக்கப்படாமல் உள்ள பட்சத்தில், அனைத்து அமைப்புகளும் இந்த ஆய்வு செழுமையாக நடைபெற துணை நிற்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வு “மலேசியக் குடும்பம்” எனும் கொள்கையின் அடிப்படையில் மலரும் என்பதில் ஐயமில்லை. வளமான, நிலையான 12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இன,மத பேதமின்றி அனைவரும் அரவணைக்கப்படுவர் என பெரிதும் நம்பப்படுகிறது.

இந்த முதல் சந்திப்பில் இடம்பெற்ற இயக்கங்கள் யாவும் இந்தத் திட்டத்தை முழுமையாக வரவேற்றதோடு, தங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். ஆக அனைவரின் ஒத்துழைப்போடு மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்தக் கோவில்கள்களின் தகவல்கள் அடங்கிய முகப்பு ஒன்று விரைவில் உருவாகிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal