Home நாடு பூலாய் இடைத் தேர்தல் : அதிருப்தி இந்தியர் வாக்குகள் பெரிக்காத்தான் கூட்டணிக்கா?

பூலாய் இடைத் தேர்தல் : அதிருப்தி இந்தியர் வாக்குகள் பெரிக்காத்தான் கூட்டணிக்கா?

327
0
SHARE
Ad

ஜோகூர்பாரு : செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள  பூலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளோடு சுயேட்சை வேட்பாளர்களும் பங்கேற்கும் மும்முனைப் போட்டிகள் உருவாகியுள்ளன.

பூலாய் தொகுதிக்கு போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் – அமானா கட்சியின் –  வேட்பாளர் சுஹைசான் கையாத், ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் ஆவார். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் பெர்சாத்து கட்சியைச் சார்ந்த சுல்கிஃப்லி ஜாபர். சுயேச்சை வேட்பாளர் சம்சுடின் முகமது ஃபௌசியும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

2018 புள்ளிவிவரங்களின்படி 49 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 39 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும் 10 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களையும் கொண்டது பூலாய் நாடாளுமன்றம். மற்ற வாக்காளர்கள் 1 விழுக்காடு. தற்போது இந்தியர்களின் வாக்கு வங்கி 12.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அண்மைய சில வாரங்களில் இந்திய சமூகத்தில் எழுந்திருக்கும் அதிருப்தி அலைகள் பூலாய் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் அல்லது எதிர்ப்பு அடையாளமாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெப்பம் தணியும் முன்னே, அடுத்த கட்ட அரசியல் அனல் காற்று பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை மையம் கொள்ளத் தொடங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சரும், அமானா கட்சியின் துணைத் தலைவருமான சாலாஹூடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெறவிருக்கிறது.

கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சாலேஹூடின் அயூப் 33,174 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணியின் நூர் ஜாஸ்லானைத் தோற்கடித்தார். நூர் ஜாஸ்லானுக்கு 26,523 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பாஸ் வேட்பாளருக்கு 4,332 வாக்குகள் கிடைத்தது.

பூலாய் தொகுதி 166,653 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 927 பேர் காவல் துறை, இராணுவ வாக்காளர்கள் மற்றும் அவர்களின் துணைவியர்கள் ஆவர்.

பூலாய் வாக்காளர்களில் 21 முதல் 29 வரை வயதுடைய வாக்காளர்கள்தான் மிகப் பெரிய விழுக்காட்டினர் ஆவர். 21.05 விழுக்காட்டினரான இவர்கள் 35,074 எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றனர்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மற்ற மாநிலங்களில் வீசிய பெரிக்காத்தானின் ‘பச்சைப் புயல்’ ஜோகூரிலும் நுழைய முடியுமா என்பதை பூலாய் இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்.