Home நாடு ‘துபாய்’ நகர்வு உண்மைதான் – ஆனால் தோல்வியில் முடிந்தது – சாஹிட் கூறுகிறார்

‘துபாய்’ நகர்வு உண்மைதான் – ஆனால் தோல்வியில் முடிந்தது – சாஹிட் கூறுகிறார்

297
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் துபாய் நகரில் சந்தித்து சதியாலோசனை தீட்டியது உண்மைதான் எனக் கூறிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் சிலருடன், ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் சில தனிநபர்களும் துபாய் நகர்வில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இந்த சதியாலோசனையில் ஈடுபட்டவர்கள் துபாய் நகரில் எங்கு சந்திப்பு நடத்தினார்கள் என்பது முதல் உளவுத் துறை அறிக்கையைத் தாங்கள் பெற்றிருப்பதாகவும் சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இத்தகைய முயற்சிகள் வீண் வேலை என்றும் ஒற்றுமை அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் வலிமையுடன் ஆட்சி செய்து வருகிறது என்றும் சாஹிட் ஹாமிடி மேலும் தெரிவித்தார்.

தங்களின் தற்போதைய தலையாய முக்கியத்துவம் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றுவதுதான் என்றும் கூறிய சாஹிட் சதியாலோசனையில் ஈடுபட்டவர்ளின் அடையாளங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

புதிய அரசாங்கம் அமைக்க விரும்புபவர்கள் அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமென்வும் சாஹிட் அறிவுறுத்தினார்.

கடந்த சனிக்கிழமையன்று, ஜே-கோம் என்னும் அரசாங்கத் தொடர்பு இலாகாவின் தலைமை இயக்குநரான இஸ்மாயில் யூசோப் மத்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து அம்பலப்படுத்தினார்.

எனினும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் இந்த வதந்தியை மறுத்ததோடு, ஒற்றுமை அரசாங்கம் ஒற்றுமையாக இருந்தால், அது போன்ற எந்த நடவடிக்கையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.