
சென்னை: இந்து புராணத்தில் மாம்பழத்திற்கு ஒரு முக்கிய இடம் எப்போதும் உண்டு. மாம்பழத்திற்காக இரு சகோதரக் கடவுள்கள் விநாயகர்-முருகன் மோதிக் கொண்ட கதை உட்பட பல கதைகள் புராண இதிகாசங்களில் இருக்கின்றன.
தற்போது மாம்பழம் சின்னத்தைக் கொண்ட பாமக கட்சியைக் கைப்பற்றுவதில் தந்தை டாக்டர் இராமதாசும் மகன் டாக்டர் அன்புமணியும் நிகழ்த்தி வரும் மோதல்கள் முற்றியிருக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தந்தையர் தினத்தில் தன் தந்தைக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அன்புமணி அவருக்கு எதிராக திருவள்ளூரில் தனது அணியின் பொதுக் கூட்டத்தை நடத்தினார். எனினும் அந்தப் பொதுக் கூட்டத்தில் தன் தந்தை இராமதாசுக்கு தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், தைலாபுரம் தோட்டத்தில் தன் அணியினரின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் இராமதாஸ் பா.ம.க. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இறுதியில் தந்தையும் மகனும் இறங்கி வருவார்கள் – இணங்கி வருவார்கள் – என்ற எதிர்பார்ப்பு பரவலாக அரசியல் பார்வையாளர்களிடையே பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எனினும் இன்றுவரை பாமகவில் மோதல் தீர்ந்தபாடில்லை.