ஆகஸ்ட் 1- தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது.
இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
21-ம்தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைப்பெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
23-ம் தேதி மாலை தென்னிந்திய மொழி கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இனிய விருந்து நடைபெறும், தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் ஒன்று சேரும் குடும்ப விழா.
24-ம்தேதி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சரித்திர விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதல் அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் அனைத்து மொழியைச் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
இந்த விழா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோ முதலாளிகள் என அத்தனை சங்கங்களையும் சார்ந்தவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.
இது மட்டுமல்லாமல் சென்னை நகரமெங்கும் வண்ணமயமான அலங்காரங்கள், திரையரங்குகளில் சிறந்த இந்தியத் திரைப்படங்கள், பூங்காக்களிலும் சென்னையில் முக்கிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், திரைப்பட போட்டிகளில் வெற்றிப் பெற்ற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைப்பெறும்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த 2 அயிரத்திற்கும் மேற்பட்ட அத்தனை கலைஞர்களையும் நம் தமிழகமும் சென்னை மாநகர மக்களும் வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.