Home கலை உலகம் நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

506
0
SHARE
Ad

Tamil Actor Vivek

சென்னை, டிசம்பர் 27- நடிகர் விவேக்குக்கு பசுமைக் காவலர் விருதை வழங்கினார் நீதிபதி ஜோதிமணி.

பதிவுத் துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார் ‘ரியல் எஸ்டேட் குற்றங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கழகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

ஆ.ஆறுமுக நயினார் எழுதிய மற்றொரு புத்தகமான ‘ஸ்டாம்ப் லாஸ் தமிழ்நாடு’ என்ற புத்தகத்தின் 3-வது பதிப்பை நீதிபதி ப.ஜோதிமணி வெளியிட்டார். அதை நடிகர் விவேக் பெற்றுக்கொண்டார். பின்னர் நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ என்ற விருதை நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார்.

விழாவில் நீதிபதி ப.ஜோதி மணி பேசுகையில், ”மரங்கள் அழிவதால்தான் மழை பெய்ய மறுக்கிறது. மரம் மண்ணரிப்பை தடுக்கும். மலைச்சரிவையும் தடுக்கும். எனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னபடி நடிகர் விவேக் மரங்களை நட்டுவருகிறார்.

இது பெரிய சமூகப்பணியாகும். நடிகர் விவேக் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் அதற்காக அவரை பாராட்டுகிறேன்,” என்றார். நடிகர் விவேக் பேசுகையில், ”முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்பு வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியிருக்கிறார்.

நான் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தி இந்த விழாவில் எனக்கு ‘பசுமை காவலர்’ விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கி உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீர்ப்பாயத்தில் இருக்கும் நீதிபதி தந்தது மகிழ்ச்சியாக, பெருமையாக உள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது,” என்றார்  நடிகர் விவேக்.