Home இந்தியா இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் இந்தி, மற்றவர்களுக்கு இல்லை- மத்திய அரசு!

இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் இந்தி, மற்றவர்களுக்கு இல்லை- மத்திய அரசு!

361
0
SHARE
Ad

indian governmentடெல்லி, ஜூன் 21 – சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமேதானே தவிர, எந்த ஒரு இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் இந்தியைத் திணிப்பதற்கானது அல்ல என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற உடனேயே உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி பிரிவானது, சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்புக் குரல் கொடுத்தன. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி கூட எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் இன்று பிரதமர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த கவலைகள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.

உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி துறையானது கடந்த 2014 மார்ச் 10-ஆம் தேதியன்று இந்தியை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நடைமுறையை உறுதி செய்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

அதில், ஏ பிரிவு மாநிலங்கள் அதாவது இந்தி பேசக் கூடிய மாநிலங்கள் சமூக வலைதளங்களில் இந்திக்கு சம முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆகியவற்றில் இந்தியும் ஆங்கிலமும் கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே உரியது. இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்தி பேசுகிற மாநிலங்களுடனான இணைப்பு மொழியாக இந்தி இருக்கும் என்ற நடைமுறையை இந்த சுற்றறிக்கையும் உறுதி செய்கிறது.

இதையேதான் மே 27-ஆம் தேதியன்று உள்துறை அமைச்சகமும் உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் இந்தி பேசுகிற மாநிலங்களில் சமூக வலைதளங்களில் இந்திக்கு கட்டாயம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு புதிய கொள்கையும் அல்ல. இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியும் அல்ல என பிரதமர் அலுவலக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.