“ஏழைகளுக்கும், சமுதாயத்தின் அடித்தட்டு பகுதி மக்களுக்கும் புதிய நம்பிக்கை ஒளியை தரும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. சோதனையான இந்த காலகட்டத்திலும், தனது அரசு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் முடிந்த அளவு உதவிகளை செய்ய உறுதி எடுத்துள்ளது.
நாடு இப்போது சந்தித்து வரும் சவால்களில் இருந்து விடுபடுவதற்கான எல்லாவித முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இறக்கும் நிலையில் உள்ள நாட்டின் பொருளாதார நிலைக்கு ஒரு புதிய வாழ்வாகவும், அடித்தட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் சூரியோதயமாகவும் இந்த பட்ஜெட் வந்துள்ளது.
125 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக தனது அரசு, இந்தியாவை தட்டுப்பாட்டில் இருந்து நிச்சயம் வெளியே கொண்டுவரும். இந்த வலிமை நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இந்த பட்ஜெட் இந்தியாவை திறமை மிக்கதாகவும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும்.
இந்த பட்ஜெட் மக்கள் பங்களிப்புக்கும், மக்கள் சக்திக்கும் ஒரு தூண்டுகோலாகவும் இருக்கும். இதுவரை பின்தங்கியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்லும்.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கும் குடும்ப பெண்களுக்கு இந்த பட்ஜெட் ஒரு நம்பிக்கை ஒளியை தரும். மிகவும் முக்கியமாக பெண்கள் மேம்பாட்டுக்கும், பெண்களின் கல்விக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கங்கை சுத்திகரிப்பு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பாதுகாப்பு துறையில் தன்னிறைவு, விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இதற்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.