Home நாடு சுல்தானிடம் மன்னிப்பு கோருகிறோம் – ஐசெக, பிகேஆர் அறிவிப்பு

சுல்தானிடம் மன்னிப்பு கோருகிறோம் – ஐசெக, பிகேஆர் அறிவிப்பு

523
0
SHARE
Ad

Lim Guan Engபெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 10 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவிடம் மன்னிப்பு கோருவதாக ஐசெக தெரிவித்துள்ளது.

டத்தோஸ்ரீ வான் அசிசாவின் பெயரை மட்டுமே மந்திரி பெசார் பதவிக்குப் பரிந்துரை செய்வது என பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் கலந்தாலோசனை செய்த பிறகே முடிவு செய்யப்பட்டதாக ஐசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

“கடந்த 2013 -ம் ஆண்டு தற்போதைய மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே நடைமுறையின்படியே இந்த முறையும் முடிவெடுக்கப்பட்டதாக அறிகிறோம். மேலும் சிலாங்கூர் சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்களில் 30 பேர் டாக்டர் வான் அசிசாவை
ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்,” என்று லிம் குவான் எங் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அரச அமைப்புக்கு ஐசெக எப்போதும் விசுவாசமாக இருப்பதாகக் தெரிவித்துள்ள அவர, சுல்தானின் உத்தரவு குறித்து அன்வாருடன் தாம் மீண்டும் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது முடிவால் சுல்தான் வருத்தமடைய நேரிட்டதற்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த 1957 -ம் ஆண்டு முதற்கொண்டு பின்பற்றப்படும் நடைமுறையை தான் கெஅடிலான் தற்போது கடைபிடித்து இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் மற்றும் ஐசெகவும் ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக சிலாங்கூர் சுல்தான் தனது கடும் அதிருப்தியை திங்கட்கிழமையன்று தனது தனிச்செயலர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.