Home உலகம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங்கில் நுழையத் தடை!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங்கில் நுழையத் தடை!

453
0
SHARE
Ad

britishலண்டன், டிசம்பர் 3 – இங்கிலாந்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங்கில் நுழைவதற்கு சீனா திடீர் தடை விதித்துள்ளது. ஹாங்காங் தீவை 1898-ம் ஆண்டு இங்கிலாந்து, சீனாவிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்தது.

குத்தகை காலம் முடிவடைந்ததும், கடந்த 1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து அரசு மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு ஹாங்காங்கில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் சீனா அங்கு தொடர்ந்து தனது ஆளுமையை செலுத்தி வருகின்றது. அதனை எதிர்த்து ஹாங்காங் ஜனநாயக அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தாங்கள், சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்த பின்பு அங்கு நிலைமை எப்படி இருக்கிறது, இருதரப்பிலும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக இங்கிலாந்து அரசு, வெளியுறவு தேர்வுக்குழு தலைவர் ரிச்சர்டு ஒட்டாவே தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர்கள் குழு ஒன்றை ஹாங்காங் அனுப்ப முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

ஆனால், சீனா அதற்குத் தடை விதித்துள்ளது. சீனா-ஹாங்காங் உள்விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிட அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து தேர்வுக்குழுவின் தலைவர் ரிச்சர்டு ஒட்டாவே கூறுகையில், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்”.

“ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் பணிகளை எவ்வாறு மேற்கொண்டு வருகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக அங்கு செல்ல விரும்பினோம். ஆனாலும் எங்களது குழுவிற்கு ஹாங்காங்கில் நுழைய சீனா தடை விதித்துள்ளது.”

“எங்களுடைய பணிகளைச் செய்யவிடாமல் சீன மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.