Home உலகம் ராஜபக்சே வீடுகளில் அதிரடி சோதனை: அரசியலில் பழிவாங்கப்படுவதாக கதறல்!

ராஜபக்சே வீடுகளில் அதிரடி சோதனை: அரசியலில் பழிவாங்கப்படுவதாக கதறல்!

512
0
SHARE
Ad

rajapaksaகொழும்பு, ஜனவரி 21 – இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் வீட்டில் காவல் துறை உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அவரது அலறி மாளிகையில் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறிசேனாவிடம் ஆட்சியை இழந்த ராஜபக்சேவை, அவரது கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருந்தும் வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில், சீனா முதலீடு அளித்த திட்டங்களில் அவர் பல்லாயிரம் கோடி ஊழல் செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் செயல்படுத்தப்பட்ட  பல்வேறு நலத்திட்டங்களிலும் அவரது குடும்பம் சுயலாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் அவரது குடும்பத்தினர், அரசின் பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், அவரது ஹம்பன்டோட்டா மாவட்டத்தில் உள்ள ராஜபக்சேவின் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்பாகினி கார் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இராஜபக்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் குடும்பம் 1931-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகின்றது.

ஆனால், எங்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அரசியல் ரீதியாக என்னை பழிவாங்காதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.