Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா – சீனா இடையே ரூ.1.39 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – சீனா இடையே ரூ.1.39 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து!

556
0
SHARE
Ad

india-china-business-forum4பெய்ஜிங், மே 18 – சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில், ரூ. 1.39 லட்சம் கோடிக்கு இந்திய – சீன நிறுவனங்கள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மூன்று நாள் பயணமாக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் 22 முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் சீனாவின் அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா உள்பட சீனா லைட் அண்ட் பவர், ஜியோமி, ஹுவாய், டிரினா சோலார் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பிற்குப் பின், இரு நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், மோடி முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

மரபுசாரா எரிசக்தி, மின்சாரம், உருக்குத் துறை, சிறு, நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“இந்தியாவில் வெளிப்படைத் தன்மையுள்ள, நிலையான ஆட்சியை நடத்தி வருகிறோம். நாட்டின் எதிர்காலத்தையும், நீண்ட கால வளர்ச்சியையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்து வருகிறோம்”.

“இந்தியாவில் வர்த்தகச் சூழல் மாறிவிட்டதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எளிதில் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்”.

“இதற்காக, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்ட அமலாக்கம், அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை அதிகரிப்பது என முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கி வருகிறோம். சீன நிறுவனங்களுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்”.

“இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நீங்கள் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், உங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்போம்”.

“ஆசியக் கண்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் நிலைத்தன்மைக்கும், இந்தியா- சீனா இடையே நல்லுறவு நீடிக்க வேண்டியது அவசியம்” என்றார் மோடி.