குமாரி கிருத்திகா மதுர நாட்டிய மாமணி திருமதி குருவாயூர் உஷா அவர்களின் திருமகளாவார். புலிக்குப் பிறந்தது நிச்சயம் புலிதான் என்பதை இந்த 17 வயதிலேயே நாம் பார்த்த இந்நிகழ்ச்சியின் வழி நிரூபித்துக்காட்டினார் கிருத்திகா.
அவர் வழங்கிய முதல் நாட்டியத்தின் பெயர் ‘ஹம்ஸ நிருத்தியம்’. அதாவது ஹம்ஸ – என்பது அன்னப்பறவை. இது அன்னம் என்கிற ஆன்மா இறைவனுடன் கலப்பதான நாட்டிய அமைப்பு.
இந்த ஹம்ஸ நிருத்திய நிகழ்ச்சிக்கு டாக்டர். மு. தர்மலிங்கம் ‘அம்ச’ எனத் தொடங்கும் ராகங்களான அம்சத்துவனி, அம்சநாதம் மற்றும் அம்சநந்தி எனும் மூன்று ராகங்களில், அம்ச மாளிகையாக பாடலுக்கு சிறப்பாக இசையமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
உஷாவைப் போல் தேர்ந்த ஆசிரியர்களால் மட்டுமே இது சாத்தியம். கணபதியே நேரில் வந்து ஆடுவதைப்போல் அபிநயம் செய்து அனைவரையும் கண் இமைக்காமல் ரசிக்கச் செய்தார் கிருத்திகா.
அடவுகளோடு ஜதீசுவரத்தை நுண்கலை கலாலய ஆசிரியை கனகமணி விஜயேந்திரா நுட்பமாக அமைத்துத் தர, தனி நடனமாக நிருத்தத்தில் ஆடி நம்மை அலைக்கழித்தார் கிருத்திகா.
இரு வெவ்வேறான வேகத்தில் அமைந்த ஸ்வரம், சொல்கட்டு, சாகித்தியம் கொண்ட, இருபது நிமிட நாட்டியத்தில், எட்டு நிமிடம் அதிவேகமாக தொடர்ந்து ஆடி பலத்த கைத்தட்டலைப் பெற்றார் கிருத்திகா.
தன் தாயார் திருமதி குருவாயூர் உஷா அவர்களின் நட்டுவாங்கத்தில் வர்ணத்திற்கு கிருத்திகா ஆட பார்ப்பவர்களின் இதயமும், இந்த ஆட்டத்தின் வேகம் தாங்காமல் தடுமாற, தான் மட்டும் தடுமாறாமல், தன் தாயாரின் நட்டுவாங்கத்திற்கு ஈடுகொடுத்து ஆடினார் கிருத்திகா.
‘தொட்டு தொட்டு பேச வரான்’ எனும் பெரியசாமி தூரன் இயற்றிய நாயகன் நாயகி உறவைப்பற்றிய பதத்தை கிருத்திகா ஆடவில்லை. மாறாக உண்மையிலேயே தன் எதிரே நாயகன் நிற்பதுபோல் அவனுடன் கிருத்திகா உரையாடியது, உறவாடியது அத்துணை அற்புதமாக இருந்தது.
அவரது பார்வை வாங்கப்போகும் கைத்தட்டல்களில் இல்லை. கண்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற மிகச்சிறப்பான நளினமான பார்வையை வெளிப்படுத்தி நம்மை மயக்கினார்.
மங்களம் ஆடி முடிக்குமுன் தன் தாயார் திருமதி உஷா மற்றும் அச்சுதன் சசிதரன் நாயர் தொகுப்பில் சிவசக்தியாக உருமாறிய நாட்டியமும், தில்லானாவும் சளைக்காமல் ஆடி முடித்தார்.
மேடையில் திருமதி உஷாவுடன் வாய்ப்பாட்டை பவானி லோகேஸ்வரன் பாடி அசத்த, மிருதங்கத்தில் தீபன் ஆறுமுகமும், வயலினில் ‘வாத்ய ரத்னாகர’ ஸ்ரீ அச்சுதன் சசிதரன் நாயர் அவர்களும் அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஒலி,ஒளி மற்றும் அரங்க அமைப்பு அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.
நிகழ்ச்சியை டாக்டர். மு. தர்மலிங்கமும், ஸ்ரீவர்த்தினியும் ஒவ்வொரு பாடலைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லி சிறப்பாக நடத்தித் தந்தனர்.
அது அவரது அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய பயிற்சியே என்பதை நமக்கு உணர்த்தியது. இரண்டு பாடல்களுக்கொரு முறை விதவிதமாக வண்ண ஆடை மாற்றி அலங்காரத்துடன் வந்தது திகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
மொத்தத்தில் கிருத்திகாவின் ஹம்ஸ நிருத்தியம் நாட்டிய நிகழ்வை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. அற்புதம். அற்புதம்! இசை ஜாம்பவான்கள் குடும்ப வாரிசு பல படிகள் மேலேயே சாதிப்பது திண்ணம்.
தாய் எட்டடி பாய, குட்டியோ முப்பத்திரண்டு அடி பாய்ந்தார் கிருத்திகா. கிருத்திகாவின் தாயாருக்கு மட்டுமல்ல பெருமை. நமக்கும் தான்!
-சா.விக்னேஸ்வரி