Home இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்: மத்திய அரசு நழுவுகிறது?

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்: மத்திய அரசு நழுவுகிறது?

472
0
SHARE
Ad

sri-langka-indiaபுதுடெல்லி, மார்ச். 7- இலங்கை இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வருகின்றன.

ஆனால் மத்திய அரசு இதில் இன்னும் உறுதியான முடிவு எடுக்காமல் நழுவி வருகிறது. டெல்லி மேல்-சபையிலும் தமிழக எம்.பி.க்கள் இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தின் இறுதி வடிவம் குறித்தும், அதில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்த பின்னரே இந்தியாவின் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

இதன் மூலம் இலங்கையை எதிர்க்க இந்தியா தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. இலங்கையுடனான உறவை துண்டிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடவேண்டும், ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று இந்தியாவின் ஒரு அங்கமாக விளங்கும் தமிழகத்தில் இருந்து ஒட்டுமொத்த குரல்கள் ஒலிக்கிறது.

ஆனால் மத்திய அரசோ இலங்கையை நட்பு நாடு என்று கூறி அதற்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

தீர்மானத்தின் இறுதி வடிவத்தின் அடிப்படையில் இந்தியாவின் நிலை இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படி இருந்தாலும் அந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானதாகத்தானே இருக்கும் பின்னர் ஏன் முடிவு எடுக்க தாமதம். ஒரு வேளை கடந்த முறை அமெரிக்க தீர்மானத்தின் வாசகங்களின் தீவிரம் குறைக்கப்பட்டது போல இந்த முறையும் வாசகங்களின் தீவிரம் குறைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதன் மூலம் நட்பு நாடு என்ற முறையில் இலங்கையை காப்பாற்ற இந்தியா மறைமுகமாக முயற்சிப்பதாகவும் கடைசி நேரத்தில் தீவிரம் இல்லாத தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் எந்த பயனும் இல்லை. இந்தியா நினைத்தால் மிக தீவிரமான தீர்மானத்தை கொண்டுவர செய்யலாம் என்றும் பேசப்படுகிறது.

தமிழ் எழுத்தாளர் அமைப்பினர் கூறும் போது, ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டத்துக்கு இலங்கை உதவி புரிகிறது. இந்த விஷயத்தில் இலங்கையை மிரட்டி பணிய வைக்கவே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறது. அதற்கு இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டுள்ளது. எனவே அமெரிக்க தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை என்றனர்.

இதற்கிடையே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வருவது பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று இலங்கை மந்திரி மகிந்தா சமரசிங்கே தெரிவித்தார். இவர் இலங்கை அதிபரின் மனித உரிமை சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கை சார்பில் தான் பங்கேற்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் சமரசிங்கே தெரிவித்தார்.