Home நாடு மலையேற்ற வீரர் மாயம்: உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழு தகவல்!

மலையேற்ற வீரர் மாயம்: உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழு தகவல்!

544
0
SHARE
Ad

hashersearchகோலாலம்பூர், ஜூன் 24 – செராசில் உள்ள புக்கிட் ஹடாமாஸ் பகுதியில் மாயமான மலையேற்ற வீரர் டியோ கிம் லியனைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அவர் மாயமானதாகக் கருதப்படும் பகுதியில் ரத்தக் கறைகளும், வாந்தி எடுத்ததற்கான அறிகுறிகளும் காணப்படுவதால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

53 வயதான டியோ கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மலையேற்றப் பயிற்சிக்காகப் புக்கிட் ஹடாமாஸ் சென்றிருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. சக வீரர்கள் மற்றும் நண்பர்களால் ஆய்லி என்று அழைக்கப்படும் டியோவைத் தேடும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

தேடும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஹர்டியால் சிங் கூறுகையில், “திங்கட்கிழமை மாலை கண்டறியப்பட்ட ரத்தக்கறையின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அந்தப் பரிசோதனைகளின் முடிவில் அது மனித ரத்தம் என்பதும், ஓ பாஸிடிவ் வகையைச் சேர்ந்தது என்பதும் உறுதியாகி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் ஆய்லியின் மகனது ரத்த வகையும் ஓ பாஸிடிவ் தான்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே மீட்புக் குழு அளித்த தகவல் படி, மலையேற்ற வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், பொது நடவடிக்கைப் படை அதிகாரிகள் என சுமார் 100 பேர் ஆய்லியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் 4 நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரத்தக்கறை காணப்பட்ட பகுதியைச் சுற்றி தற்போது தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆய்லியைத் தேடும் பணியில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.