Home Featured நாடு தடுப்புக்காவலில் பாலமுருகன் மரணம்: பிரேதப் பரிசோதனையில் காயங்கள் உறுதியானது!

தடுப்புக்காவலில் பாலமுருகன் மரணம்: பிரேதப் பரிசோதனையில் காயங்கள் உறுதியானது!

929
0
SHARE
Ad

Balamuruganகிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளை வழக்கில் ஒன்றில் சந்தேகத்தின் பேரில், வடக்கு கிள்ளான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட எஸ்.பாலமுருகன் (வயது 44) என்பவர் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது மரணத்திற்கு நியாயம் கேட்டு அவரது குடும்பத்தினர் தற்போது அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர்.

கிள்ளான் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட எஸ்.பாலமுருகனை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டும் கூட, மீண்டும் அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் சென்ற அதிகாரிகள், சற்று நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக பால முருகனின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பாலமுருகனின் சடலத்தைப் பார்த்த அவரது சகோதரர் பால்ராஜ், அவரது உடம்பில் காயங்களும், கீறல்களும் இருந்ததாகக் கூறுகின்றார்.

மேலும், நீதிமன்றத்தில் பாலமுருகன் நிறுத்தப்பட்ட போது, அவருக்கு மூக்கிலும், வாயிலும் இரத்தம் வழிந்து கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார்.

ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பாலமுருகனை சந்தேகத்தின் பேரில் அழைத்துச்சென்ற காவல்துறை, சட்டத்திற்குப் புறம்பாக  தடுத்து வைத்திருந்ததாக பால்ராஜ் குற்றம் சாட்டுகிறார்.

அதோடு, பாலமுருகனின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடம்பில் காயங்களும், கீறல்களும் இருந்தது உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில், பாலமுருகனின் மரணத்திற்கு உள்துறை அமைச்சு பதில் சொல்ல வேண்டும் என்றும், அவரது சடலத்தை இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை அமைக்க வேண்டம் என்றும், பாலமுருகனின் குடும்பம் நீதி கேட்டு வருகின்றது.

படம்: டேவிட் பேஸ்புக்