Home Featured நாடு ஜோகூர் சுல்தான் புகார்: ‘முக்கியப் பிரமுகருக்கு’ எம்ஏசிசி கெடு!

ஜோகூர் சுல்தான் புகார்: ‘முக்கியப் பிரமுகருக்கு’ எம்ஏசிசி கெடு!

724
0
SHARE
Ad
MACCபுத்ராஜெயா – ‘டான்ஸ்ரீ’ பட்டத்திற்குப் பரிந்துரை செய்தால், 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுப்பதாகக் கூறிய, ‘முக்கியப் பிரமுகருக்கு’ மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வியாழக்கிழமை இரவு வரை கெடு விதித்திருக்கிறது.

இன்று இரவிற்குள் அவர் தானாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு வரத் தவறினால், அவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும் எம்ஏசிசி தெரிவித்திருக்கிறது.

இது குறித்து எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் டத்தோ அசாம் பாக்கி கூறுகையில், “எங்களுக்குத் தெரியும் அவர் தலைமறைவாக இருக்கிறார். ஆனால் மலேசியாவில் தான் இருக்கிறார். இன்று எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் படி அவரை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை, ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், கோலாலம்பூரைச் சேர்ந்த நபர், அரசாங்கத் தலைமைச் செயலகத்திடம் பரிந்துரைத்து ‘டான்ஸ்ரீ’ பட்டம் வழங்கும் பட்டியலில் தன்னை சேர்த்தால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாகக் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

எம்ஏசிசி தன்னைச் சந்தித்தால், அந்நபரைப் பற்றிய விவரங்களைத் தான் வெளியிடுவதாகவும் ஜோகூர் சுல்தான் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், எம்ஏசிசி அதிகாரிகள் சுல்தானைச் சந்தித்து அந்நபர் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.