Home நாடு பினாங்கு அரசுக்கு இந்து இயக்கம் துணை நிற்கும்

பினாங்கு அரசுக்கு இந்து இயக்கம் துணை நிற்கும்

985
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்தியர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டது.

எல்லா நிலையிலும் இந்தியர்களின் நிலை மேம்பட வேண்டும் என்றும் இதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தோள் கொடுக்க தயாராய் இருப்பதாகவும் பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி. முருகையா கூறினார்.

கடந்த வியாழக்கிழமை மே 30 ஆம் தேதி பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் யாவ் உடன் பினாங்கு இந்து இயக்கத்தினர் மரியாதை நிமித்தம் சந்தித்த போது இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் இந்திய  சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவற்றுள் முக்கியமானதாக மாநில அரசின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் கொம்தார் கட்டிடத்தில் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும், குறைகளையும் கேட்கும் ஒரு மையத்தை அமைக்க வேண்டுமென ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

மேலும், இந்தியர்களுக்காக ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்தியர்கள் அதிகம் வாழும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் சேவை மையத்தில் தமிழ் பேசும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பதும், மாநில அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதைப் போல் பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப் பள்ளியை நிறுவ வேண்டும் என்பதும் பினாங்கு முதல்வரிடம் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகளாகும்.

மாநில சுற்றுலாத்துறை மற்றும் பாரம்பரியத்துறை அலுவலகங்களில் இந்திய அதிகாரிகளை நியமிப்பது என பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

பினாங்கு இந்து இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு என்பதாலும், மேலும் இயக்கம் மேற்கொள்ளும் மருத்துவ மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுவதாகவும், இதற்கு மாநில அரசின் நிதி உதவி தேவைப்படுவதாகவும் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது

முருகையாவின் தலைமையில் இயங்கும் பினாங்கு இந்து இயக்கம் மற்ற சமூக நல சேவைகளை தவிர்த்து கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் அதிகமான அனாதைப் பிணங்களை அடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான அனாதைப் பிணங்கள் பினாங்கு பொது மருத்துவமனை மற்றும் இங்குள்ள சமூக நல, முதியோர் இல்லங்களிலும் உறவினர்களால் புறக்கணிப்பட்டவர்களின் சடலங்கள்.

இதில் அயல்நாட்டினரின் சடலங்களும் அடங்கும்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியம், பள்ளிகளில் இயக்கம் மேற்கொள்ளும் கல்வி பயிலரங்கம், இந்திய மாணவர்களுக்கான ஒழுக்க கல்வி திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

“இந்நிகழ்ச்சிகளை நடத்த இதுவரை 21 பள்ளிகளிலிருந்து அழைப்பு வந்துள்ளதாக கல்விக்குழுவின் தலைவருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

குறைகளைக் கேட்டறிந்த மாநில முதல்வர்
பினாங்கு இந்து இயக்கத்தினர் சேவைகளைப் பாராட்டியதோடு
அரசு மான்யம் , இந்தியர்களுக்கான முதியோர் இல்லம் விவாதிக்கப்பட்ட மேலும் பல பிரச்சினைகள்
குறித்து பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்.