Home One Line P2 எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி

767
0
SHARE
Ad

இலண்டன் : ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பும் இரஷியா மற்றும் மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருமளவில் குறைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து தற்போது சந்தையில் எண்ணெய் இருப்பு அதிகரித்து அதன் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலைமையைச் சீர்செய்யும்நோக்கில் தங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, குறைத்து, அதன் மூலம் எண்ணெய் விலையை சமநிலையில் வைத்திருக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவெடுத்துள்ளன.

வியன்னா நகரில் வெள்ளிக்கிழமை (6 டிசம்பர்) நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்கள் வரை குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவெடுத்தன. இந்த முடிவைத் தொடர்ந்து தற்போது நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

2017-ஆம் ஆண்டு முதற்கொண்டே ஓபெக் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நாளொன்றுக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை சந்தையிலிருந்து அகற்ற உடன்பாடு கண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றன. இந்த உடன்பாடு மார்ச் 2020-க்குள் ஒரு முடிவுக்கு வருகிறது.

இந்தப் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து 0.8 விழுக்காடு உயர்ந்து பீப்பாய்க்கு 59 டாலராக விலை உயர்ந்தது.

ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பில் அமெரிக்கா இடம் பெறவில்லை. இதன் காரணமாக அமெரிக்காவும் அதனுடன் இணைந்து செயல்படும் மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும், கூடுதல் எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்வதால், ஒபெக் நாடுகளால் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.