Home One Line P2 ஓமான் : புதிய ஆட்சியாளர் ஹைதாம் பின் தாரிக் பதவியேற்றார்

ஓமான் : புதிய ஆட்சியாளர் ஹைதாம் பின் தாரிக் பதவியேற்றார்

1142
0
SHARE
Ad

மஸ்கட் (ஓமான்) – மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானின் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் பின் சைட் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காலமானதைத் தொடர்ந்து சுல்தான் ஹைதாம் பின் தாரிக் அல்-சைட் (படம்) அந்நாட்டின் புதிய ஆட்சியாளராக நேற்று சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

79 வயதான சுல்தான் காபூஸ் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்தவராவார். தனது தந்தையிடம் இருந்து பதவியை ஏற்றுக் கொண்ட சுல்தான் காபூஸ் தன் ஆட்சிக் காலத்தில் ஓமானை நவீனமயமான நாடாக உருமாற்றினார். உடல்நலக் குறைவால் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்குப் பிறகு வரவேண்டிய ஆட்சியாளர் யார் என்பதை காலமான சுல்தான் காபூஸ் கடிதம் ஒன்றின் வழி குறிப்பிட்டிருந்ததாகவும் அரசாங்க அதிகாரிகள் அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்து அதன் மூலம் சுல்தான் ஹைதாம் நியமிக்கப்படுவதாகவும் ஓமான் நாட்டின் தொலைக்காட்சி அறிவித்தது.

வெள்ளிக்கிழமை காலமான ஓமான் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ்
#TamilSchoolmychoice

1970-இல் தனது தந்தையைப் பதவியிலிருந்து வீழ்த்தி, அரண்மனையைக் கைப்பற்றி பதவிக்கு வந்த சுல்தான் காபூஸ் வாரிசு யாரும் இல்லாமல் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் யாரை அடுத்த ஆட்சியாளராக நியமிப்பார் என்ற கேள்வி ஓமான் நாட்டில் எப்போதுமே எழுப்பப்பட்டு வந்தது. 79-வது வயதுவரை ஆட்சி புரிந்த சுல்தான் காபூஸ்தான் மத்திய கிழக்கு நாடுகளிலேயே நீண்ட காலம் ஆட்சி புரிந்தவராவார்.

இந்நிலையில்தான் ஓமான் நாட்டின் கலாச்சார அமைச்சரான ஹைதாம் பின் தாரிக்கை அடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கிறார். ஹைதாம் காலமான சுல்தான் காபூசின் நெருங்கிய உறவினருமாவார்.

தற்போது மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதட்டமான சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடான ஓமானின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரிட்டனின் பாதுகாப்பின் கீழ் இருந்த நாடு ஓமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா, ஏமன், ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளை எல்லை நாடுகளாகவும் கடலுக்கு அப்பால் ஈரானையும் அண்டை நாடுகளாகக் கொண்டிருக்கும் ஓமான் இன்றைய நிலையில் வட்டார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது.