கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோகுல் ராஜ் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் மரணம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தீயணைப்பு வீரர் மணிகண்டன் என்பவரின் தற்கொலையும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரிகள் கொடுத்த கடுமையான நெருக்கடிகளால் மனம் உடைந்த அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் தனது நண்பர்களுக்கு வாட்சாப் மூலம் காணொளி ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த காணொளியில் தன்னை உயர் அதிகாரிகள் (பெயர் குறிப்பிட்டு) கடுமையாக நெருக்கடி செய்வதாகவும், அதனால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மரணத்திற்கு காரணமான அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மணிகண்டனின் இந்த காணொளி தற்போது நட்பு ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தங்கள் நண்பனின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சக பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.