டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி, அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும், முகமது இர்பான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 181 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றியை சுவைத்தது.
நியூசிலாந்து அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். ஏற்கனவே பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் 3 வெற்றிகளுடன் குரூப்-2 பிரிவில் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
3-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். இதனால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய சிதைந்து போய் விட்டது என்றே சொல்லலாம்.