ஜோர்ஜ் டவுன் – நேற்று வியாழக்கிழமை (1 பிப்ரவரி 2018) பினாங்கு மாநிலத்திற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மாணவி வசந்தப் பிரியா மரணத்தைத் தழுவினார் என்ற துயரச் செய்தி கேட்டு, உடனடியாக அவரது இல்லம் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியதோடு, வசந்தப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு கைத்தொலைபேசி காணாமல் போன விவகாரத்தில் மன சஞ்சலம் கொண்ட வசந்தப்பிரியா தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் காப்பாற்றப்பட்டார். எனினும் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்காக அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
வசந்தப்பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் வசந்தப்பிரியாவின் தந்தை முனியாண்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டாக்டர் சுப்ரா நலம் விசாரித்ததாகவும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, நிலைமையையும் நேரில் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TamilSchoolmychoice
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று வியாழக்கிழமை வசந்தப்பிரியா காலமானார். தகவல் அறிந்ததும், உடனடியாக டாக்டர் சுப்ரா இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வசந்தப் பிரியா இல்லம் விரைந்தார்.
“இந்த சோக சம்பவம் என்னையும் பொதுமக்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது” என்றும் டாக்டர் சுப்ரா கருத்து தெரிவித்தார்.