தம்பின் வட்டாரத்தில் உள்ள 427 மாணவர்களுக்கு நூல் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன், நம் சமூகத்தின் முக்கியப் பிரச்சனையாக அமையும் வறுமையை ஒழிப்பதற்கு கல்வி மிக அவசியமானது என அறிவுறுத்தினார்.
ஏறக்குறைய 20,000 வெள்ளி மதிப்புள்ள புத்தகங்களை அன்பளிப்பாக அளித்த வீரப்பன், கழிவு விலையில் புத்தகங்களை வழங்கிய யாழ் நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இலவசமாக வழங்கப்பட்ட யாழ் மேற்கோள் மற்றும் பயிற்சி புத்தகங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திட ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்.வீரப்பன் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கானத் தேவைகளை அரசாங்கம் கண்டறிந்து செய்து வருவதாகவும், ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் மாணவர்கள் பயிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்பின் மாவட்டத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக் குழுத்தலைவர் வாசு கருப்பையா, தலைமை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பொது இயக்கங்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-செய்தி, படங்கள் உதவி : நிர்மாயா ராதா