“பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான தருணமிது. அதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி அரசு பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டங்களையும் உத்திகளையும் வகுத்து வருகிறது” என்று புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 22-ஆம் தேதி ஒருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற பூர்வகுடி மக்கள் தேசிய மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உட்புறப் பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடியினர் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ளும் அதேவேளை தாங்கள் நிலையான வருமானம் ஈட்டும் சூழலையும் அமைத்துக் கொள்ளலாம்; அதன்வழி தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்றார். குறிப்பாக, பூர்வகுடி சமுதாயத்தில் இளம் தொழில்முனைவர்கள் அதிகமாக உருவாவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். தற்பொழுது அமலில் இருக்கும் பொருளாதாரக் கொள்கைக்கு உட்பட்டே இதை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 14-ஆவது பொதுத் தேர்தல் சமயத்தில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து இந்த அரசு ஒருபோதும் பின்வாங்காது. அதன் அடிப்படையில், தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் 38-ஆவதாக இடம்பெற்றுள்ள பூர்வகுடி சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்னும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதியைக் கடைப்பிடிக்கும் என்றார்.
நாடு முழுவதும் 853 பூர்வகுடி கிராமங்கள் இருக்கின்ற நிலையில், 84 விழுக்காட்டு கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது; அதைப்போல சுமார் 80 விழுக்காட்டு கிராமங்களுக்கு மின் வசதியும் 79 விழுக்காட்டு கிராமங்களுக்கு நீர் விநியோக சேவையும் ஏழைக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஏறக்குறைய 82% குடும்பங்களுக்கு வீட்டு வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
எனவே, பூர்வகுடி சமுதாயத்திற்கு நூறு விழுக்காட்டு வசதியை எல்லா வகையிலும் ஏற்படுத்தித் தருவதில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை காட்டும் என்றும் பிரதமர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.