நீதிபதி ரோபியா முகமட் தனது தீர்ப்பை 41 நாட்கள் விசாரணைக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.
“மார்பு பகுதியில் பலமான அடி, அவருக்கு அவராக ஏற்படுத்திக் கொண்டது அல்ல, அல்லது விபத்தினால் ஏற்பட்டது அல்ல. ஆனால், அறியப்படாத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட குற்றச் செயலாகும்” என்று நீதிபதி கூறினார்.
அடிப்பின் குடும்ப உறுப்பினர்களும், அவரது குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோர் மற்றும் முகமட் கமாருசாமான் அகமட் வாஹாப் ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அதிகாலையில் அடிப் படுகாயமடைந்ததை அடுத்து, அக்காயங்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகளைத் தீர்மானிக்க 30 சாட்சிகள் அடங்கிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சீ பீல்ட் கோயில் வளாகத்தில் நடந்த கலவரத்தின் போது அடிப் பலத்த காயங்களுக்கு ஆளானார். முதலாக அவர் எஸ்ஜேஎம்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு, மேலதிக சிகிச்சைக்காக தேசிய இதய மையத்திற்கு (ஐஜேஎன்) மாற்றப்பட்டு, பின்னர் டிசம்பர் 17-ஆம் தேதி காலமானார்.