ஈப்போ: பல்கலைக் கழகத்தில் படித்து பட்டதாரியாகி சிறந்த எதிர்காலத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கையோடு ஹஜ்ஜூப் பெருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடச் சென்ற மாணவர்களில் 15 பேர் ஒரே வாகன விபத்தில் பலியான சோகம் நாடெங்கும் மக்களிடையே பரவிக் கிடக்கிறது.
தங்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் இன்னொரு புறம் என எங்கும் துயரம் படிந்து கிடக்கும் நிலையில், பல்வேறு கேள்விகளும் எழுந்திருக்கின்றன. எப்போதும் பேருந்து, லாரி ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவது-பயணிகளுக்கான வாகனங்கள் முறையான தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் பயணம் செய்வது – என்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அதே வேளையில் நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை காவல் துறையினரே முன்வைத்துள்ளம். இருண்ட பகுதிகளில் போதிய விளக்குகள் நிர்மாணிக்காதது, சாலைகள் பிரதிபலிப்பு விளக்கு சமிக்ஞைகள் போதிய அளவில் பொருத்தாது. போன்ற காரணங்களாலும் விபத்துகள் ஏற்படுகின்றன என காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.
நாட்டுக்கு சேவை செய்த 9 காவல்துறையினர் பலியான சம்பவத்தின் துயரங்கள் மறக்கப்படுவதற்கு முன்னரே, 15 மாணவர்கள் ஒரே விபத்தில் பலியாகி இருக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை ஜூன் 8 அதிகாலையில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கிரிக், பானுன் என்ற இடத்தில் 42 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றொரு காருடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்ததில் 15 மாணவர்கள் மரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.
அந்த மாணவர்கள் அனைவரும் தஞ்சோங் மாலிமில் உள்ள உப்சி (UPSI-University Pendidikan Sultan Idris) பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களாவர். 44 பேர்கள் பயணிக்கவிருந்த அந்த பேருந்தில் இறுதி நேரத்தில் இருவர் சேர்ந்து கொள்ளவில்லை. அதில் அதிர்ஷ்டசாலி ஒருவர் பேருந்து புறப்பட்ட பின்னர் 15 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பினார்.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்த கார் காமெரா பதிவு ஒன்றை வாகனமோட்டி ஒருவர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். தற்போது பெரும்பாலான வாகனங்களில் டேஷ்காம் என்னும் காமெராக்கள் பொருத்தப்பட்டு, சாலை நடப்புகளை காணொலி பதிவுகளாக பதிவு செய்கின்றன. இந்த விபத்து குறித்த அத்தகைய காமெரா பதிவை இந்த விபத்தை விசாரிக்கும் சிறப்புக் குழு ஆராய்ந்து வருகிறது.
அந்தப் பதிவை ஆராய்ந்ததில் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை மீறி செலுத்தப்பட்டதும், முன்னே சென்ற கார் ஒன்றை முந்திச் சென்று அலைக்கழிந்த பேருந்து, தடுமாறி எதிரில் வந்த காரை மோதி, சாலைத் தடுப்பைக் கிழித்துக் கொண்டு பள்ளத்தில் வீழ்ந்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், பேராக் மாநில அரசாங்கம் நிதி உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது. பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா ஈப்போ மருத்துவமனைக்கு நேரடியாக வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மாமன்னர் தம்பதியரும் பிரதமரும் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.