Home Photo News முரசு அஞ்சல் புதிய பதிப்பு 3 நாடுகளில் வெளியீடு; கலந்து கொள்ள முன்பதிவு செய்யலாம்!

முரசு அஞ்சல் புதிய பதிப்பு 3 நாடுகளில் வெளியீடு; கலந்து கொள்ள முன்பதிவு செய்யலாம்!

112
0
SHARE
Ad

உலகம் எங்கும் உள்ள தமிழ் மொழி கணினி பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய பதிப்பு மிக விரிவான  மாற்றங்களுடன் மூன்று நாடுகளில் அடுத்தடுத்து வெளியீடு காணவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான இணைய முன்பதிவு தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுக்கே இடவசதி உண்டு என்பதால், வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவுக்கான இணய முகவரி:

https://anjal.net/launch

1985 காலக்கட்டத்தில் தமிழைக் கணினியில் ஏற்றி அச்சிடுவதென்பது எளிதான ஒன்றல்ல. இணையத்தளங்களிலும் அந்தச் சவால் தொடர்ந்தது. அந்த சிக்கல்கள் அனைத்தையும் களைந்து, எங்கும் தமிழின் பயன்பாட்டைக் கொண்டுவரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது முரசு அஞ்சல். அந்த நோக்கத்தை அடைந்து, இந்த நாற்பது ஆண்டுக்கால பயணத்தில், பிற வடிவங்களில் பரிணமித்து வெற்றிநடை போட்டுவருகிறது. அதற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முரசு அஞ்சலில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே முக்கியமான காரணம்.

முத்து நெடுமாறன்
#TamilSchoolmychoice

எழுத்துருவியல் துறை நிபுணரான முத்து நெடுமாறனின் நீண்ட கால உழைப்பில் உருவானது முரசு அஞ்சல் மென்பொருள்.

முரசு அஞ்சல் விசைமுகம் ஏற்கெனவே இயல்புநிலை விசைமுகமாக மெக், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களில் இருக்கிறது. ஐபோன், ஆண்டிராய்டு கருவிகள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றவாறு வேறு என்ன புதிய கூறுகள் புதிய பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன என்கிற எதிர்பார்ப்பு பயனர் மத்தியில் இருக்கிறது.

நீண்டகால முரசு அஞ்சல் பயனர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கான மின்னஞ்சலில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த வெளியீட்டு நிகழ்ச்சியானது மூன்று நாடுகளில் மூன்று வெவ்வேறு நாள்களில் நடைபெறவிருக்கிறது. முதல் வெளியீடு ஜூன் 27 அன்று மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரிலுள்ள பிஏசி – பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி – மண்டபத்தில் (BAC College Auditorium, Hisniaga Sdn Bhd, Jalan Utara, Section 14, 46200 Petaling Jaya) நடைபெறுகிறது. அடுத்த நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஜூலை 5 அன்று நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்ச்சியானது சென்னையில் ஜூலை 12ஆம் தேதியில் நடைபெறுகிறது. தமிழ் மென்பொருள் ஒன்று, இத்தகைய மாபெரும் வெளியீடு காண்பது மலேசியத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய செய்தியாகும்.

முரசு அஞ்சலின் புதிய பதிப்பில் அறிவார்ந்த உள்ளீட்டு முறைகளும் அழகுத் தமிழ் எழுத்துருக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் செல்லினம், முரசு அஞ்சலின் வடிவமைப்பாளரான முத்து நெடுமாறனின் நாற்பதாண்டுக்கால பயணத்தை விவரிக்கும் உரு என்கிற நூலும் இந்த நிகழ்ச்சிகளில் வெளியீடு காண்கிறது.

மூன்று பகுதிகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் தேநீர், சிற்றுண்டியுடன் நிறைவு பெறும். அந்தந்த நாட்டு நேரப்படி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன. தமிழுக்கான இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.