கோலாலம்பூர்: “தமது இன்தமிழ்ப் பாக்களால் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் மலேசிய சிங்கப்பூரில் வலம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய இளவழகனாரின் மறைவு செய்தியானது தமிழ் படைப்புலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என்று தான்ஸ்ரீ குமரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
கவிஞரும் எழுத்தாளருமான ஐ.இளவழகு, கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன்10-ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 2.15 முதல் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:
No:732, JALAN HIJAYU 1/28,
TAMAN HIJAYU 1B,
BANDAR SRI SENDAYAN
71950, SEREMBAN

‘சந்தனக் கிண்ணம்’ என்ற சிறந்த கவிதை நூலைப் படைத்த மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதனின் இளைய சகோதரர் இளவழகு.
தொடர்ந்து தன் இரங்கல் செய்தியில் இளவழகுவின் இலக்கியப் பங்களிப்பிற்கு புகழாரம் சூட்டிய குமரன், “தமது பாப்புனையும் ஆற்றலால், தமக்கென்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டதுடன், நாட்டில் அன்று நடத்தப்பட்ட பெரும்பாலான கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்ற நற்றமிழ்ப் பாவலராக திகழ்ந்தவர் இளவழகனார். அறுபதாம் ஆண்டுகளில் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை தோற்றுவித்தபோது, எங்களுடன் இணைந்து அதன் வளர்ச்சிக்கு, குறிப்பாக தமிழ் இலக்கியப் வளர்ச்சிக்கு ஆவர் ஆற்றிய பணிகளை நானறிவேன்” என்றும் குறிப்பிட்டார்.
“ஈப்போ, பாரிட் சிற்றூரை அடுத்த பாரிட் பேராக் தோட்டமென்று நினைவு, அங்கு பிறந்து சிங்கையிலும் பெங்களூருவிலும் வாழ்ந்த தலைசிறந்த கவிஞரும், அறிஞர் அண்ணாவால் முன்னுரை வழங்கப்பபட்டு, மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் பாடநூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது சந்தனக் கிண்ணம் நூலின் ஆசிரியர் கவிஞர் ஐ. உலகநாதனின் இளவல் ஆவார் இளவழகனார்.
கவிதைத் துறையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாவலர் நாவல் துறையில் கால் பதித்து அதிலும் புகழ்பெற்றது ஆச்சரியமே. அவரது இலட்சியப் பயணம் நாவல், மலேசியா கல்வி அமைச்சால் ஐந்தாம் படிவத்திற்கான இலக்கியப் பாட நூலாகத் தேர்வுபெற்று அவருக்கு சிறப்பினை சேர்த்தது. தமிழ் இளைஞர் மணி மன்றப் பாசறையில் வளர்ந்து, தமிழ் இலக்கியவானில் உலாவந்து, அரசு தரம் வாய்ந்த நவல் படைத்த இளவழகனார் என்றென்றும் நம்மோடு தமிழாக வாழ்ந்துகொண்டிருப்பார். அவரது ஆதன் அமையுற பரம்பொருளின் திருவடிகளைப் போற்றுவோம்” என்றும் தான்ஸ்ரீ குமரன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுளார்.