முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான திவால் வழக்கு அரசியல் வட்டாரங்களில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வழக்கிலிருந்து அவர் தப்பிக்க முடியுமா? வழக்கை நீதிமன்றத்தில் நீட்டிக்க முடியுமா? காலம் தாழ்த்த முடியுமா? அவர் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்ன?
பார்ப்போம்!
செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
இதன் மூலம் நஜிப் உள்நாட்டு வருமானவரி வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டிய கடனாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
4 பிப்ரவரி 2021-ஆம் தேதியன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் செலுத்த வேண்டிய பணத்திற்காக முன்அறிவிக்கையை (நோட்டீசை) வருமான வரி வாரியம் அனுப்பியிருக்கிறது.
நஜிப் 1.69 பில்லியன் ரிங்கிட் செலுத்தாத காரணத்தால் அதற்கான வட்டி 5 விழுக்காடு விதிக்கப்பட்டிருக்கிறது. வட்டியையும் சேர்த்து தற்போது அவர் பிப்ரவரி 4 வரையில் செலுத்த வேண்டிய தொகை ஒரு பில்லியன் எழுநூற்று முப்பத்தெட்டு மில்லியனைத் தாண்டுகிறது.
அதாவது 1,700 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல்!
இந்தத் தொகை செலுத்தப்படாத வரையில் வட்டியால் அதன் மொத்தத் தொகை மேலும் கூடிக் கொண்டே போகும்.
2011-ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை நஜிப் தனது வருமான வரித் தொகை செலுத்தாத காரணத்தால் இந்தப் பிரச்சனையை அவர் எதிர்நோக்கியிருக்கிறார்.
வருமான வரி பாக்கியை செலுத்தாததால் திவால் வழக்கு
முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரதமரே வருமான வரி பாக்கியை செலுத்தாமல் காலம் கடத்தியிருக்கிறார். அதற்கான கால நீட்டிப்பு அவகாசத்தையும் முன்கூட்டியே பெறத் தவறியிருக்கிறார். இதுவும் அவரின் இன்னொரு கோண அதிகார விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வருமானவரி பாக்கி தொடர்பில் நஜிப்புக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டில் சம்மரி ஜட்ஜ்மெண்ட் (Summary Judgement) என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்பது எப்படிப்பட்ட தீர்ப்பு என்றால், முழுமையான விசாரணையுடன் கூடிய தீர்ப்புக்கு முன்னரே ஆவணங்களின் அடிப்படையில், வழக்கு நடத்தும் நேரத்தைச் சுருக்கி, சீக்கிரமாகப் பெறப்படும் தீர்ப்பு.
நீங்கள் பணம் செலுத்த வேண்டியதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள் முழுமையாக இருக்கின்றன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இந்த ஆவணங்களுக்கு எதிரான ஆணித்தரமான எதிர்வாதம் எதுவும் கடனாளி வசம் இல்லை. எனவே நீதிமன்றம் எனக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுக்க வேண்டும் என கடன்கொடுத்தவர் தனது மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
பொதுவாக வங்கிக் கடன்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி, சுங்கவரி, தீர்வைகள் போன்றவற்றிற்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் கடனாளிக்கு எதிர்வாதம் செய்வதற்கான முகாந்திரங்கள் இல்லை என நீதிமன்றம் முடிவு செய்தால் கடனைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடனாளிக்கு உத்தரவிடும்.
நஜிப் வழக்கில் அதைத்தான் செய்திருக்கிறது நீதிமன்றம்.
நஜிப்பின் மேல்முறையீடுகள்
இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட வருமானவரி தொகை தவறானது என்ற மேல்முறையீடு ஒன்றையும் நஜிப், வருமானவரி இலாகாவின் விசாரணை மன்றமாக செயல்படும் நடுவர்கள் ஆணையத்திலும் (Special Commissioners of Income Tax) சமர்ப்பித்திருக்கிறார்.
தன்மீதான எஸ்ஆர்சி நிறுவனம், 1 எம்டிபி தொடர்பிலான வழக்குகளை நீதிமன்றத்தில் திறமையான வழக்கறிஞர்களின் வாதத் திறனைக் கொண்டு நஜிப் காலம் தாழ்த்தலாம். வழக்கை நீட்டிக்கலாம். மேல்முறையீடுகள் செய்யலாம்.
ஆனால் இந்த வருமானவரி வழக்கு மிகவும் சிக்கலானது. ஆவணங்களின் அடிப்படையிலானது. எனவே, இதனைத் தாமதப்படுத்துவதும் சுலபமல்ல!
1967-ஆம் ஆண்டுக்கான வருமானவரி சட்டத்தின்படி வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இருந்தாலும் அதைக் காரணம் காட்டி வருமான வரி இலாகா மதிப்பீடு செய்யும் தொகையை ஒத்திப் போட முடியாது. மேல்முறையீடு செய்துள்ளேன் என்ற காரணத்தைக் காட்டி வருமானவரி பாக்கியைச் செலுத்தாமல் தவிர்க்க முடியாது.
அந்தத் தொகையை முதலில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் வழக்கில் வெற்றியடைந்தால் வருமானவரி இலாகா நீதிமன்ற தீர்ப்புப்படி உரிய தொகையை திருப்பிக் கொடுக்கும்.
இந்த சட்ட விதியைத் திருத்த வேண்டும் என ஜசெக தலைமைச் செயலாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கூட சில நாட்களுக்கு முன்னர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில் தன்மீதான திவால் நடவடிக்கையை மேற்கொண்டு தொடராமல் இருக்க மற்றொரு இடைக்காலத் தடையுத்தரவு கோரி மனு செய்திருக்கிறார் நஜிப். இந்த வழக்கு ஜூன் 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஜூன் மாதத்திற்குள் நஜிப்பின் வருமான வரி வழக்கு முடிவுக்கு வரலாம்
ஆனால், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நஜிப்பின் வருமான வரி வழக்கும் அதன் தொடர்பிலான திவால் வழக்கும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நஜிப்புக்கு இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால், வருமானவரி வழக்கில் அவர் முதலில் பாக்கித் தொகையைச் செலுத்திவிட்டுத்தான் தனது மேல்முறையீடுகளைத் தொடர முடியும். எனவேதான் இந்த வழக்கு சீக்கிரமாகவே முடிந்து விடும்.
இந்த வழக்கு தன் மீது பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அரசியல் களங்கம் கற்பிப்பதற்காகத் தொடுத்த வழக்கு என்று தன்னைத் தற்காக்கிறார் நஜிப். அந்த வழக்கைத் தற்போது மொகிதின் யாசினின் தேசியக் கூட்டணி தனக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கிறது என்கிறார் நஜிப்.
பிரதமர் என்ற முறையில் எனது வருமானவரியை முறையாகச் செலுத்தியிருக்கிறேன் என்கிறார் நஜிப்.
நஜிப்பின் தற்காப்பு வாதங்களும் அரசியல் ரீதியான காரணங்களைக் கொண்டதுதான். ஆனால், நீதிமன்றத்தில் சட்டரீதியாக அவரது வாதங்கள் நிற்குமா? சட்டரீதியாக இந்த வழக்கில் அவர் வெல்ல முடியுமா என்பதுதான் கேள்வி!
ஆக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வருமானவரி பாக்கி வழக்கும், திவால் வழக்கும் ஒரு முடிவுக்கு வரும்போது, நஜிப் மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியாது என்ற நிலைமை அவருக்கு ஏற்படும்.
அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிட முடியாது என்ற நெருக்கடி நிலையும் அவருக்கு ஏற்படும்.
அப்படியே நஜிப் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை வருமானவரி வழக்கால் இழந்தாலும், அவரின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
கடந்த பொதுத் தேர்தல் 2018 மே மாதத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எதிர்வரும் மே 2021-ஆம் தேதியோடு 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நாடாளுமன்ற காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகளே இருந்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறது மலேசிய சட்டம்.
ஆக, நாடாளுமன்றத்தில் இன்னொரு உறுப்பினரின் எண்ணிக்கை குறையும்.
மிகவும் சிக்கலான வருமான வரி வழக்கில் நஜிப் தப்பிக்க முடியுமா? அல்லது அந்த வழக்கை மேலும் காலம் தாழ்த்த முடியுமா? என்பது ஜூன் மாதத்திற்குள் தெரிந்து விடும்.